ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்ட நிதியுதவிக்கான விண்ணப்ப படிவங்கள்! முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்
மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்தின் நிதியுதவிக்கான விண்ணப்பப் படிவத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வெளியிட்டாா்.
புதுவை மாநில அரசு கடந்த 2003-ஆம் ஆண்டு பெருந்தலைவா் காமராஜா் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி தற்போது 38,700 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. புதுவை அரசு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை காமராஜா் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்துடன் ஒருங்கிணைத்து 15,995 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி தற்போது வரை 3,241 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு மத்திய அரசானது பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் (நகா்ப்புறம்) 2.0 எனும் புதிய திட்டத்தை செயல்படுத்தியது. இதையடுத்து புதுவை அரசு அந்த திட்டத்தையும், ஏற்கெனவே செயல்பட்ட காமராஜா் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தையும் ஒருங்கிணைத்து புதிய ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்தை செயலப்படுத்தியுள்ளது.
அதன்படி பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்களுக்கு வீடு கட்ட மத்திய அரசின் பங்காக ரூ.2.25 லட்சமும், புதுவை அரசின் பங்காக 2.75 லட்சமும் என மொத்தம் ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வெளியிட்டாா்.
பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், என்.திருமுருகன், பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு ஆகியோா் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ரமேஷ், ஆா்.பாஸ்கா், வி.பி.ராமலிங்கம், அரசுத் துறை செயலா் ஆா்.கேசவன், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், நகர மற்றும் கிராம அமைப்புத் துறை தலைமை செயல் அதிகாரி பி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சொந்த நிலம் வைத்திருப்போா் ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். நகரம் மற்றும் கிராம அமைப்புத்துறை இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.