ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை: சஞ்சீவ் கன்னா
ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து இன்றுடன் (மே 13) ஓய்வு பெறவுள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த இறுதி நாளான இன்று, சஞ்சீவ் கன்னாவிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
''ஒய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை; மாறாக சட்டத் துறையில் ஏதையாவது செய்யலாம்'' எனக் குறிப்பிட்டார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை குறித்து பதிலளித்த அவர்,
''நீதித் துறையின் சிந்தனை தீர்க்கமானதாக இருக்க வேண்டும். இந்த வழக்கில் உள்ள நிறை மற்றும் குறைகளை ஆராய்ந்து பகுத்தறிவுடன் நாங்கள் முடிவு செய்கிறோம். அதனைச் சரியாகச் செய்யும்போது முடிவுகளை எடுக்கிறோம். பிறகு, நீங்கள் செய்தது சரியா? தவறா? என்பதை எதிர்காலம் உங்களுக்குச் சொல்லும்'' எனக் கூறினார்.
சஞ்சீவ் கன்னா யார்?
1960 மே 14ஆம் தேதி பிறந்தவர் சஞ்சீவ் கன்னா. 1983ஆம் ஆண்டு பார் கவுன்சில் உறுப்பினரானார். ஆரம்பக்கட்டத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து பின்னர், தில்லி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினார்.
2005 ஆம் ஆண்டு தில்லியின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானார்.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தில் முக்கிய தீர்ப்பளித்தவர். அயோத்தி வழக்கில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய அமர்வில் உறுப்பினராக இருந்தவர்.
இவர், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எச்.ஆர். கன்னாவின் மருமகனாவார். இவரின் தாத்தாவான சரவ் தயாள், முக்கிய வழக்குரைஞராவார். (1919 ஜாலியன் வாலாபாக் படுகொலையை விசாரிக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியில் இருந்தவர்.)
இதையும் படிக்க | முப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பாடம்: மோடி