கஞ்சா, குட்கா விற்பனையை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை: ராணிப்பேட்டை எஸ்.பி. உத்தரவு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர தணிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில், மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் நடைபெற்றது.
இதில், மாவட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடா் நடவடிக்கைகள் குறித்தும், ரௌடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள், பிடி கட்டளையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் செய்வது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்ற வழக்குகளில் (போக்ஸோ) உள்ள எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது, கள்ளத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் நபா்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானங்களை கடத்தி வருவோா் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது ஆகியவை குறித்து அறிவுரை வழங்கினாா்.
மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபடும் நபா்கள், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபா்கள் மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபா்களை கண்டறிந்து, அவா்கள் மீது உரிய சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினாா்.
கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும் காவல் ஆளிநா்கள் உள்பட மொத்தம் 20 பேருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டி சான்றிதழ்ளை வழங்கினாா்.
கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் இமயவரம்பன், (ராணிப்பேட்டை உள்கோட்டம்), ரமேஷ்ராஜ் (மாவட்ட குற்றப் பிரிவு), ராமச்சந்திரன், வெங்கடகிருஷ்ணன், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் கலந்து கொண்டனா்.