கோடியூர் வாரச்சந்தை: சுகாதார சீர்கேட்டை சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த...
கண்ணாமூச்சி ஆடும் ஈரான்-இஸ்ரேல்! இறங்கி அடித்துவிட்டு போர் நிறுத்தமா?
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் முடிவாகியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலின் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், கத்தார், ஈராக், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவும் என்ற உச்சக்கட்ட அபாய நிலையில் போர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் அறிவித்தார்.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் வடக்கு மற்றும் மத்திய நகரங்கள் மீது போர் விமானங்கள் இன்று அதிகாலை 3 மணிக்கு குண்டுகளை மழைபோல் வீசித்தாக்குதல் நடத்தியிருக்கிறது. அமெரிக்க அதிபர் அறிவித்த போர் நிறுத்தம் இன்று காலை 4 மணி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் 3 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பரம எதிரிகளுக்கு இடையேயான போர் 12வது நாளை எட்டியிருக்கும் நிலையில், போர் ஒப்பந்தம் எதுவும் இதுவரை முடிவாகவில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது.
இதற்கிடையே ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் செயத் அப்பாஸ் அரக்சி, போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரும் என்பது போன்று சூசகமாக அறிவித்திருந்தார். ஆனால், இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.
இந்த நிலையில்தான், மிகக் காட்டமான பதிவு ஒன்றை ஈரானின் புரட்சிகர காவல்படை வெளியிட்டது. அதில், முட்டாள்தனமான மற்றும் அறிவில்லாத அமெரிக்க அதிபரை நாங்கள் எச்சரிக்கிறோம், ஒருவேளை, ஈரான் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு உண்டான தக்கப் பாடம் கற்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
அது மட்டுமல்லாமல், இஸ்ரேலின் ரமத் கன், டெல் அவிவ் மக்களை, வெளியேறுமாறும், நாங்கள் குண்டுகளை வீச திட்டமிட்டுள்ளோம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இவ்விரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில்தான், மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தம் கூறித்துப் பேசியிருக்கிறார்.
அதாவது, இப்போது முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. தயவுசெய்து அதை மீறாதீர்கள் என்று ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இன்று அதிகாலை ஈரான் மீது கொத்து கொத்தாக குணடுகளை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், தற்போது போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், ஈரான் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஒரு பக்கம் டிரம்ப் போர் நிறுத்தம் அறிவித்திருக்கும் நிலையில், இரு நாடுகளும் அதனை ஏற்காததால், அடுத்தடுத்து வரும் தாக்குதல் மற்றும் அறிவிப்புகள் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.