கனடா: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் மூன்றாவது G7 நாடா? - விரிவான தகவல்கள்
செப்டம்பரில் பாலஸ்தீனத்தை தனி நாடாக கனடா ஏற்றுக்கொள்ளும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்ததாக கனடாவும் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம், அண்மையில் இந்த முடிவை எடுக்கும் மூன்றாவது G7 நாடாக கனடா திகழ்கிறது.
கார்னி கூறியது என்ன?
``ஜனநாயக சீர்த்திருத்தங்களை பாலஸ்தீன தேசிய ஆணையம் முன்னெடுக்க வேண்டும். ஹமாஸ் பங்கேற்பு இல்லாமல் அடுத்த ஆண்டு தேர்தல்களை நடத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளை கனடா பிரதமர் மார்க் கார்னி விதித்துள்ளார்.
பாலஸ்தீனை அங்கீகரிக்கக் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பை வரவிருக்கும் ஐ.நா பொதுக்குழு கூட்டத்தில் கனடா முன்னெடுக்கும் என கார்னி தெரிவித்தார்.

மேலும் அவர், "காஸாவில் மனிதர்கள் வதைப்படுவது சகிக்க முடியாத அளவில் உள்ளது. அது மேலும் மேலும் மோசமடைந்தும் வருகிறது," என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் பாலஸ்தீன தேசிய அணையம், தனது ஆட்சி முறையை திருத்தி, ஆயுதமில்லா நிலைமைக்கு உடன்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் அவர் விதித்துள்ளார்.
பிரதமர் கார்னி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அபாஸுடன் அதன் நிலை பற்றி பேசியதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதைய பாஸலஸ்தீன அரசு மேற்கு கரையை கட்டுப்படுத்தும் பத்தாஹ் கட்சியின் கீழ் இயங்குகிறது. காஸா பகுதியில் ஹமாஸ் ஆதிக்கம் செலுத்துகிறது. 2006 இற்குப் பிறகு இந்த பகுதிகளில் தேர்தல் நடத்தப்படவில்லை.
கனடா எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி கனடா அரசின் இந்த முடிவை எதிர்த்துள்ளது.
அக்டோபர் 7 இல் நடந்த பயங்கரவாத நடவடிக்கைக்குப் பிறகு பாஸலஸ்தீனை அங்கீகரிப்பது தவறான சமிக்ஞையை உலகுக்கு தருவதாக அது கூறி உள்ளது.
200க்கும் மேற்பட்ட முன்னாள் கனடிய தூதர்களும், பாஸலஸ்தீன அங்கீகாரத்தை ஆதரித்து கார்னிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இஸ்ரேலின் எதிர்வினை:
இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கனடாவின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது ஹமாஸுக்கு சாதகமான முடிவு என விமர்சித்துள்ள அவர், "இது ஹமாஸுக்கு வழங்கப்படும் பரிசாகும்" என்று X தளத்தில் தெரிவித்துள்ளார்
193 ஐ.நா உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீனத்தை இறையாண்மை உள்ள அரசாக அங்கீகரிக்கிறது.
7 அக்டோபர் 2023ல் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் கடத்தப்பட்டனர். அதன்பின்னர் இஸ்ரேல் காஸாவில் தாக்குதலைத் தொடங்கியது. தற்போது வரை 60,000 பேர் காஸாவில் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் இயக்கத்தின் சுகாதார துறை தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன பிரச்னை சிறு குறிப்பு:
1948-ம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றொரு பிரதேசம் இன்று வரை, தனி நாடு என்கிற அங்கீகாரத்துக்காகப் போராடிவருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அங்கீகாரத்துக்காகப் போராடிவருவது பாலஸ்தீனம்.
இஸ்ரேல். யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மத்திய கிழக்கு நாடு. இங்கு 70 சதவிகிதத்துக்கும் அதிகமான யூதர்கள் வாழ்ந்துவருகின்றனர். சுமார் 20 சதவிகித இஸ்லாமியர்களும், 10 சதவிகிதத்துக்கும் குறைவாக கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும் வாழ்ந்துவருகின்றனர்.
மற்றொரு பிரதேசமான பாலஸ்தீனம் இன்று வரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் குறிப்பிடப்பட்டுவருகிறது. 2012-ம் ஆண்டுதான் பாலஸ்தீனம் ஐ.நா-வில் `அப்சர்வர் ஸ்டேட்' என்கிற அந்தஸ்தைப் பெற்றது. இங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக இஸ்லாமிய மக்களே வாழ்ந்துவருகின்றனர். மேற்குக் கரை, காஸா என பாலஸ்தீனம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளன.