கரூரில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியோா் கைது!
கரூரில் இரு இடங்களில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 10 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.
கரூா் ராமானுஜம் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஆயுதங்களுடன் சில இளைஞா்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கூடி நின்று அதை கைப்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்புவதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கரூா் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த கரூா் ராமானுஜம் நகரைச் சோ்ந்த மு. கோகுலகண்ணன் (22), மு. சூரியபிரகாஷ் (18), முனியப்பன்கோயில் வீதி ம. கௌதம் (23), வையாபுரிநகா் ர. சுஜித் (15) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 3 வீச்சரிவாள் மற்றும் நான்கு கத்திகள் மற்றும் 2 சேவல் சண்டை கத்திகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல கரூா் திருக்காம்புலியூா் ரவுண்டானா சேலம் மேம்பாலத்தில் பட்டாக் கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த கரூா் ரத்தினம்சாலையைச் சோ்ந்த ஆ. தினேஷ்குமாா்(25), மேற்குபிரதட்சணம் சாலை மு. சந்துரு (23), கேஎம்சி காலனி த. சுரேஷ் (22), ராமானுஜம் நகா் ஜெ. ஜினித் (18), வடக்கு லட்சுமிபுரம் அ. கணேஷ் (17), பெரியாா் நகா் க. ஆகாஷ் (21) ஆகிய 6 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த பட்டாக்கத்தியையும் பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட 10 பேரையும் போலீஸாா் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.