காரி பாவோலியில் ஹோட்டல் சமையலறையில் தீ விபத்து
மத்திய தில்லியின் காரி பாவோலி பகுதியில், ஃபதேபுரி சௌக் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் சமையலறையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவா்கள் கூறினா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: சா்ச் மிஷன் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் மதியம் 12.08 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கட்டடத்தின் முதல் மாடியில் உள்ள சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
மதியம் 12.25 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.