பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவத் தளம் தகா்ப்பு: மறுகட்டமைப்புக்கு ஓராண...
`காலையில் தொழிலாளி, இரவில் கொலையாளி’ ; தோட்டத்து வீடு கொலைகள் - சிக்கிய நால்வரின் பகீர் பின்னணி
ஈரோடு மற்றும் திருப்பூரில் தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக கொலைகள் நடைபெற்ற நிலையில், அது தொடர்பாக ஈரோடு தனிப்படை போலீஸார் மூன்று தென்னை தொழிலாளிகள், நகைக்கடை உரிமையாளர் என 4 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையின்போது 10-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்கள் போட்ட பட்டியலைக் கேட்டு போலீஸாரே அதிர்ந்து போயுள்ளனராம்.
இரட்டை கொலை
திருப்பூர் மாவட்டம் சேமலைக்கவுண்டன்புதூரில் தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், அவர்களின் மகன் செந்தில்குமார் ஆகிய மூவரையும் கடந்த நவம்பர் 28-ம் தேதி, கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டு, நகைகள் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது.

அந்த வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டு 100 நாள்களைக் கடந்தும் கொலையாளிகள் பிடிபடாததால், சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், அதே பாணியில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி என்ற கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த ராமசாமி (75), பாக்கியம்மாள் (65) கடந்த மே மாதம் 1-ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு, 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொலைகள் தொடர்பாக 4 பேரை ஈரோடு தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
`காலையில் தொழிலாளி இரவில் கொலையாளி’
இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் கூறுகையில், "திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தோட்டத்து வீட்டில் வசித்த முதியவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தது ஒரே பாணியாக இருந்தது. சிவகிரி வழக்கைப் பொறுத்தவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அரச்சலூரைச் சேர்ந்த ஆச்சியப்பன் (48), மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) ஆகிய மூவரைப் பிடித்து விசாரித்தபோது, மூவரும் பழைய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.

2015-ல் திருட்டு வழக்கில் கைதாகி 9 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து வெளியே வந்துள்ளனர். சிறையில் தொடங்கிய பழக்கம், சிறையைவிட்டு வெளியே வந்த பின்பும் தொடர்ந்துள்ளது.
கொலை நடைபெற்றதற்கு 15 நாள்கள் முன்பு, ராமசாமி தோட்டத்துக்கு தேங்காய் உரிக்க ஆச்சியப்பன் சென்றுள்ளார். அப்போது, ராமசாமி, பாக்கியம்மாள் இருவரும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டுள்ளார். அதன்பின் மாதேஷ்வரன், ரமேஷுடன் சேர்ந்து திட்டமிட்டு ஏப்ரல் 28-ம் தேதி இரவு 10 மணிக்கு ராமசாமியின் வீட்டருகே உள்ள கரும்புத் தோட்டத்துக்குள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளனர்.
அங்கிருந்து வாய்க்கால் வழியே நடந்து சென்று, ராமசாமியின் வீட்டுக்கு வெளியே இருந்த கழிவறைக்குள் மூவரும் ஒளிந்து கொண்டுள்ளனர். இரவு 12 மணி அளவில் கழிவறைக்கு பாக்கியம்மாள் வந்துள்ளார். அப்போது, அவரது தலையில் கட்டையால் வைத்து அடித்துள்ளனர். பாக்கியம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார்.

பின்னர் வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த ராமசாமியையும் அதே கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், பாக்கியம்மாள் அணிந்திருந்த தாலிக்கொடி, வளையல் என பத்தேகால் பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பித்துள்ளனர்.
அந்த நகைகளை சென்னிமலைபாளையத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளரான ஞானசேகரனிடம் கொடுத்து உருக்கியுள்ளனர். மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பூரில் தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி, மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரையும் நகைக்காக இதேபோல் அடித்துக் கொலை செய்தததையும் மூவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். அத்துடன் 10-க்கும் மேற்பட்ட ஆதாயக் கொலை, கொள்ளை சம்பவங்களை செய்துள்ளதாக கூறியுள்ளனர். தொடர்ந்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையடித்த நகைகளை உருக்கிக் கொடுத்த நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளோம். அப்போதுதான் மற்ற கொலைகள் குறித்து முழுமையான விவரம் தெரியவரும். தற்போது மூவரிடம் இருந்து இருசக்கர வாகனம், கொலைக்குப் பயன்படுத்திய கையுறை, ராமசாமியின் செல்போன், உருக்கப்பட்ட பாக்கியம்மாளின் நகைகள் 82 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.
வயதானவர்கள்தான் டார்கெட்
இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். "சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு மூவரும், தோட்டத்து வீட்டில் வசிக்கும் வயதானவர்களைக் குறிவைத்து கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். ஆச்சியப்பன்தான் மூளையாக செயல்பட்டுள்ளார். தோட்டத்து வீட்டில் வயதானவர்கள் மட்டும்தான் உள்ளார்கள் என்பதை, தேங்காய் உரிக்கச் செல்லும்போது ஆச்சியப்பன் உறுதிப்படுத்திக் கொள்வார். தங்கள் மீது சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக குறைந்தது 10 நாள் முதல் ஒரு மாதம் கழித்துதான் கொள்ளை திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்தின்போது முகம் அல்லது உடல் அடையாளத்தைப் பார்த்து போலீஸிடம் சொல்லிவிடுவார்கள் என்பதற்காக கட்டை அல்லது இரும்பு ராடு மூலம் தலையில் அடித்துக் கொலை செய்து, உயிர்போவதை உறுதி செய்துவிட்டு நகை, பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை எதுவும் நடக்காததுபோல் தேங்காய் உரிக்கும் வேலைக்குச் சென்றுள்ளனர். இதுவரை மேலும் பலரையும் இதுபோன்று கொலை செய்துள்ளதாக கூறுவது எங்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது" என்கின்றனர்.

`வெளிப்படைத்தன்மை இல்லை’
இது குறித்து பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் கூறுகையில், "கொலையாளிகள் பிடிக்கப்படாததைக் கண்டித்து மே 20 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அண்ணாமலை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அவசர அவசரமாக 4 பேரை காவல் துறை கைது செய்துள்ளது. திருப்பூர் கொலையையும் தாங்களே செய்ததாக மூவரும் ஒப்புதல் அளித்துள்ளதாக ஐஜி கூறுகிறார். ஆனால், இங்கிருந்து அங்கு எப்படிச் சென்றார்கள்? கொலைக்கான ஆதாரம் என்ன என்பதை அவர் விளக்கவில்லை.
100 நாள்களைக் கடந்து திருப்பூர் கொலை வழக்கில் தடயம் ஏதும் கிடைக்காததால், அந்த வழக்கையும் இவர்கள் மீது போலீஸ் போடுகிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது. மேலும், 10-க்கும் மேற்பட்ட ஆதாயக் கொலைகளை அவர்கள் செய்ததாக செய்திகள் வருகின்றன. எனவே, இந்தக் கொலைகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்" என்றார்.
உண்மையை வெளிப்படுத்தும் பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது.