‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 7 லட்சம் மாணவிகள் பயன்: உயா்கல்வித் துறை அமைச்சா் கோ...
கேப்டன் பொறுப்பை எளிதாக்கிய முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா: ஷுப்மன் கில்
முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் கேப்டன் பொறுப்பை எளிதாக்கியதாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த முகமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. தொடர் நாயன் விருது ஷுப்மன் கில் மற்றும் ஹாரி ப்ரூக்குக்கு வழங்கப்பட்டது.
ஷுப்மன் கில் பேசியதென்ன?
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்த நிலையில், முகமது சிராஜ் போன்ற திறமைவாய்ந்த வீரர் ஒருவர் அணியில் இடம்பெற வேண்டும் என்பது ஒவ்வொரு கேப்டனின் கனவாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கடைசி டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு பேசியதாவது: முகமது சிராஜ் ஒவ்வொரு கேப்டனின் கனவு. அவர் வீசிய ஒவ்வொரு பந்துக்கும் கடின உழைப்பைக் கொடுத்தார். இந்திய அணி 2-2 என தொடரை சமன் செய்துள்ளது இந்த தொடருக்கான சரியான முடிவாக உள்ளது. தொடர் சமனில் முடிவடைந்துள்ளது இரு அணிகளும் எவ்வளவு சிறப்பாக விளையாடியன என்பதைக் காட்டியது.
முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கும்போது, கேப்டன் பொறுப்பு எளிதாகத் தெரிகிறது. இந்திய அணி இன்று மிகவும் அற்புதமாக செயல்பட்டது. நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்பதில் நம்பிக்கையாக இருந்தோம். நாங்கள் அழுத்தத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்தும் நம்பிக்கையுடன் இருந்தோம். இந்த தொடரின் சிறந்த பேட்டராக மாற வேண்டும் என்பதை இலக்காக வைத்திருந்தேன். அதனை நிறைவேற்ற முடிந்தது மிகவும் திருப்தியளிக்கிறது. இந்த தொடரிலிருந்து நாங்கள் ஒருபோதும் முயற்சியை கைவிடமாட்டோம் என்பதை கற்றுக்கொண்டேன் என்றார்.
இதையும் படிக்க: முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!