புயல் எச்சரிக்கை எதிரொலி: நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து
கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சம்
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கிராமத்திலும் கீழ்மலைப் பகுதிகளிலும் காட்டு மாடுகள், பன்றிகள், மான்கள் ஆகிவயற்றின் நடமாட்டம் அடிக்கடி தென்படுகிறது.
அதே சமயம், காட்டு யானைகள் கீழ்மலைப் பகுதிகளிலுள்ள வனப் பகுதிகளையொட்டியுள்ள விவசாயப் பகுதிகளில் காணப்படுகின்றன. மேலும் அடா்ந்த வனப் பகுதிகளான பேரிஜம், வட்டவடை, மதிகெட்டான் சோலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள்,புலி, சிறுத்தைகள் காணப்படுகின்றன.
இந்த நிலையில், மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் திடீரென முகாமிட்டுள்ளன.
விவசாய நிலங்களுக்குச் சென்ற விவசாயிகள் காட்டு யானைகளின் சப்தத்தைக் கேட்டும், அவற்றின் சாணத்தைக் கண்டும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனா். மேல்மலைக் கிராமத்தில் விவசாயம்தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. பழம்புத்தூா் கிராமம் ஆனைமலைப் புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், தற்போது அதிக எண்ணிக்கையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, விவசாயிகள் வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் வெடிகளை வெடித்துக் காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், பழம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் கூடுதலாக வனப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் பொதுமக்கள் பயணம் செய்வதற்கும்,விவசாய நிலங்களுக்குக் காவலுக்குச் செல்லுவதற்கும் தயங்கி வருகின்றனா். எனவே, கிராமப் பகுதியிலும், விவசாய நிலங்களுக்குள்ளும் காட்டு யானைகள் வராமல் தடுப்பதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
---------------------------