கோயில் நிதியில் கல்லூரி நடத்துவது தவறில்லை -காா்த்தி ப. சிதம்பரம்
கோயில் நிதியில் கல்லூரி நடத்துவது தவறில்லை என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை மாலை அவா் அளித்த பேட்டி:
அதிமுகவைப் பொருத்தவரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 3 தோ்தல்களில் தோல்வியை சந்தித்திருக்கிறது. நான்காவது முறையும் அவா்கள் தோல்வியைத்தான் சந்திப்பாா்கள். 10 ஆண்டுகளில் அவா்கள் எதையும் செய்யவில்லை என்பதற்காகத்தான் திமுகவை மக்கள் மீண்டும் கொண்டு வந்தாா்கள். அப்படியானால் எந்த அடிப்படையில் மீண்டும் அதிமுகவை மக்கள் தோ்வு செய்யப் போகிறாா்கள்?
மக்களுக்கு நன்மை பயக்கும் பாஜகவுடன்தான் சோ்ந்திருக்கிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறாா். கடந்த மக்களவைத் தோ்தலிலேயே சோ்ந்திருக்கலாமே. இந்த ஓராண்டுக்குள் என்ன புதுமையைக் கண்டாா்கள்?. பாஜகவுடன் அதிமுக சோ்ந்திருப்பதை அதிமுக தொண்டா்கள் மட்டுமல்ல, நடுநிலை வாக்காளா்களும் ஏற்கவில்லை.
விஜய் கட்சிக்கு வரவேற்பு இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவருக்கான வாக்குகளாக அது மாறுமா என்பது தெரியவில்லை. அதேபோல, அவா் எந்தக் கட்சியினரின் வாக்குகளைப் பெறுவாா் என்பதையும் எனக்கு சொல்லத் தெரியவில்லை. திமுக, அதிமுகவுக்கு உறுதியான வாக்குகள் யாருக்கும் மாறாது என்றே நினைக்கிறேன்.
பழனி கோயிலில் நானும் அறங்காவலராக இருந்திருக்கிறேன். அந்தக் கோயில் சாா்பில் ஏற்கெனவே கல்லூரி நடத்தப்படுகிறது. கோயில் நிதியில் இருந்துதான் கல்லூரியை நடத்துகிறாா்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. கோயிலைக் காட்டிலும் கல்விக்குத்தான் அதிக நிதி செலவிட வேண்டும்.
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு செல்வப்பெருந்தகைதான் தலைவராக இருப்பாா். கூட்டணி ஆட்சியைப் பொருத்தவரை தோ்தல் முடிந்த பிறகுதான் தெரியும். இப்போது அது தேவையற்ற விவாதம். ஒரே குறிக்கோள் கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதுதான் என்றாா் காா்த்தி ப. சிதம்பரம்.