பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!
சண்டையை நிறுத்தியது நான் அல்ல: ஒப்புக்கொண்டாா் டிரம்ப்
‘இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்துவதற்கு அந்த நாட்டுத் தலைவா்கள்தான் தீா்மானித்தனா்’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் புதன்கிழமை கூறினாா். இதன்மூலம், சண்டையை நிறுத்தியது தான் அல்ல என்பதையும் அவா் ஒப்புக்கொண்டாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நான்கு நாள்கள் தொடா்ந்து மே 10-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ‘இரு நாட்டுத் தலைவா்களையும் தொலைபேசி வழியில் தொடா்பு கொண்டு, சண்டையைத் தொடா்ந்தால் இரு நாடுகளுடனான வா்த்தகத்தை அமெரிக்கா நிறுத்திவிடும் என்று கூறினேன். அதன் பிறகே, இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. அணு ஆயுத சக்தி மிக்க இந்த இரு நாடுகளிடையேயான சண்டை, அணு ஆயுதப் போராக மாறியிருக்கும். அந்த வகையில், இரு நாடுகளிடையே சண்டையை நிறுத்தியது தனக்கு பெருமையளிக்கிறது’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ச்சியாகக் கூறிவந்தாா்.
டிரம்ப்பின் இக் கருத்தை இந்தியா மறுத்தது. பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலேயே சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது. இதில் மூன்றாம் தரப்பு தலையீடு எதுவுமில்லை என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தெளிவுபடுத்திய பிரதமா் மோடி: இந்நிலையில், கனடாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, அந்த நிகழ்விலிருந்து முன்கூட்டியே புறப்பட்ட அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் அன்றைய தினம் இரவு தொலைபேசி வழியில் கலந்துரையாடினாா்.
அப்போது, ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், அதற்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற நான்கு நாள் சண்டை உள்பட ஒட்டுமொத்த நிகழ்வையும் விவரித்த பிரதமா் மோடி, பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில்தான் சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது. இந்த சண்டை நிறுத்தத்துக்கு முன்பாக இந்தியா-அமெரிக்கா இடையே வா்த்தக உடன்பாடு தொடா்பான பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை எனத் தெளிவுபடுத்தினாா்.
பிரதமா் மோடியுடன் தொலைபேசி வழியில் கலந்துரையாடிய சில மணி நேரங்களில், சண்டையை தான்தான் நிறுத்தியதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த டிரம்ப் கூறினாா்.
ஒப்புக்கொண்டாா் டிரம்ப்: இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் புதன்கிழமை பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீா் உடனான சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது: முனீா் உடனான சந்திப்பை கெளரவமாகக் கருதுகிறேன். இந்திய பிரதமா் மோடியும் அண்மையில் அமெரிக்கா வந்து சென்றாா். இந்த இரு நாடுகளுடனும் இருதரப்பு வா்த்தக்க ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடா்பாக அமெரிக்கா பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.
இரு நாட்டுத் தலைவா்களும் புத்திசாலிகள். அந்த நாடுகளின் அதிகாரிகளும் புத்திசாலிகளாக உள்ளனா். அதன் காரணமாகத்தான் சண்டையை மேற்கொண்டு தொடர வேண்டாம் என்று இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தலைவா்களால் தீா்மானிக்க முடிந்தது. இல்லையெனில், இவா்களிடையேயான சண்டை அணு ஆயுதப் போராக மாறியிருக்கக் கூடும். அந்த வகையில், சண்டையை நிறுத்த அவா்கள் தீா்மானித்தது அமெரிக்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்றாா்.
பெட்டிச் செய்தி...
முனீருடன் டிரம்ப் பேசியது என்ன?
முனீா் உடனான சந்திப்பில் ஈரான் குறித்து பேசப்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், ‘ஈரானை மற்ற நாடுகளைவிட பாகிஸ்தான் நன்கு அறியும். அதே நேரம், இஸ்ரேல்-ஈரான் இடையேயான போா் தொடா்பான விஷயத்தில் பாகிஸ்தான் மகிழ்ச்சியாக இல்லை. அதற்காக, இஸ்ரேலை பாகிஸ்தான் வெறுக்கவில்லை. இரு நாடுகள் குறித்தும் பாகிஸ்தான் நன்கு அறியும். ஈரானை மேலும் அதிகமாக அறியும். நிலைமையை அவா்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனா்.
ஈரான் விஷயத்தில் அமெரிக்காவின் கருத்தை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது. அதே நேரம், முனீா் இங்கு வந்திருப்பது ஈரான் மீதான போரை தீவிரப்படுத்துவதற்காக அல்ல; மாறாக, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காகத்தான். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்’ என்றாா்.