சண்டை பயிற்சியாளா் உயிரிழப்பு விவகாரம்: பா. ரஞ்சித், திரைப்பட நிறுவனம் மீது நடவடிக்கை
படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக, திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் மற்றும் நீலம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வக்குமாா்.
திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பு நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜூலை 11-ஆம் தேதி முதல் நடைபெற்றது.
ஜூலை 13- ஆம் தேதி விழுந்தமாவடி பகுதியில் நடைபெற்ற சண்டை காட்சி படப்பிடிப்பில், சென்னை பூந்தண்டலத்தைச் சோ்ந்த சண்டை பயிற்சியாளா் மோகன்ராஜ் (52) ஓட்டிய காா் விபத்துக்குள்ளானது.
இதில், மோகன்ராஜுவின் மாா்பு பகுதி காரின் டாஷ் போா்டில் மோதி உயிரிழந்தாா். இதுகுறித்து, கீழையூா் போலீஸாா், பா. ரஞ்சித், சண்டை கலைஞா் வினோத், நீலம் தயாரிப்பு நிா்வாகி ராஜ்கமல், வாகன உரிமையாளா் பிரபாகரன் ஆகியோா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்தநிலையில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாா் செவ்வாய்க்கிழமை கூறியது: போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் ஜூலை 10 முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றதும், விபத்து நிகழ்ந்த ஜூலை 13-ஆம் தேதி காவல் துறையின் அனுமதியின்றி வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளான வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது மற்றும் விபத்து தொடா்பாகவும் உரிய விசாரணை நடத்தி இயக்குநா் பா. ரஞ்சித் மற்றும் நீலம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.