சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
சனிப்பெயர்ச்சி 2025 துலாம்: வெற்றி உங்கள் பக்கம் - எதில் கவனமாக இருக்க வேண்டும்?
திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.25 அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். துலாம் ராசிக்கு 6-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். இந்த சனிப் பெயர்ச்சியில் ஜாக்பாட் அடிக்கும் ராசிகளில் துலாம் ராசியே முதலிடத்தில் உள்ளது.
துலாம் ராசிக்காரர்களுக்கான 15 பலன்கள்:
1. துலாம் ராசியினருக்கு பல வகைகளிலும் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றமான வாழ்வைத் தரப்போகிறது. எதிர்பாராத வகையில் தனலாபம் பெருகும். பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். சொந்த ஊரிலும் உறவுகள் மத்தியிலும் உங்களின் மதிப்பும் அந்தஸ்த்தும் உயரும்.
2. குடும்பத்தில், வாழ்க்கைத் துணைவர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருவீர்கள்.
3. பிள்ளைப் பாக்கியம் எதிர்பார்த்திருக்கும் அன்பர்களுக்குப் பிள்ளை வரம் கிடைக்கும். பாதை மாறிச்சென்ற பிள்ளைகள் திருந்துவார்கள். மகனுக்கு அருகிலுள்ள இடத்திலேயே தெரிந்த சம்பந்தத்தில் பெண் அமையும்.
4. கையில் பணம், பொருள் தங்கும். உங்களில் சிலர், சொந்த வீடு கட்டி குடி புகுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காகச் சேமிப்பீர்கள். பழைய கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வீடு கட்டவும், வாங்கவும், தொழில் தொடங்கவும் வங்கிக் கடன் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு நீங்கும்.

5. சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். உங்கள் பேச்சுக்கு எல்லோரும் முக்கியத்துவம் தருவார்கள். சில பிரச்னைகளுக்கு, உங்கள் ஆலோசனையை அதிகம் எதிர்பார்ப்பார்கள்.
6. சனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை. அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். அந்தரங்க விஷயங்களை அடிமனதில் தேக்குவது நல்லது.
7. சனி 12-ம் வீட்டைப் பார்ப்பதால், வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். எனினும் சனியும் ராகுவும் ஒன்றாக 6-ம் இடத்தில் இருப்பதால் கடன் அதிகம் வாங்கும்படி நேரும். கவனத்தோடு இருங்கள். குருபகவான் 9-ம் இடத்துக்கு வரும்போதுதான் கடன் பிரச்னைகள் தீரும் என்பதால் பொறுமை அவசியம்.
8. நட்சத்திரப்படி பார்த்தால், இந்த ராசியைச் சேர்ந்த சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு, சொத்து சார்ந்த பிரச்னைகளில் நல்லதொரு தீர்வும் நிவாரணமும் கிடைக்கும். குடும்ப உறவுகள், பங்காளிகளுடனான கருத்து பேதங்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
9. சுவாதி நட்சத்திரக்காரர்கள், வியாபாரத்தை விரிவுப்படுத்த கடன் வாங்காதீர்கள். உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முன்கோபம், எளிதில் உணர்ச்சிவயப்படுவது எல்லாம் கூடாது. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி ஏமாறும் வாய்ப்பு உண்டு; கவனம் தேவை.
10. விசாக நட்சத்திரக் காரர்கள், இதுவரை விற்கப்படாமல் இருந்த சொத்துக்களை விற்றுக் கடனை அடைப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். எனினும் மே 15-ம் தேதி வரையிலும் எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
11. மொத்தத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு மே மாதத்துக்குப் பிறகு அனைத்து வகையிலும் நன்மைகள் நடக்கும். சுப காரியங்களில் தடைகள் நீங்கும். 2025-செப்டம்பருக்குப் பிறகு அதீத முன்னேற்றம் உண்டாகும்; மங்கல காரியங்கள் நடைபெறும். உடல் நலம் மேம்படும்.

12. வண்டி, வீடு போன்றவை சேரும். பெண்களுக்கு வீட்டில் நிம்மதி கிடைக்கும். உறவுகளிடம் இருந்த பிரச்னைகள் தீரும். இந்த ராசியைச் சேர்ந்த மாணவ மாணவி யருக்கு இது நல்ல காலம். வெளிநாடு சென்று பயிலும் வாய்ப்பும் உருவாகும்.
13. இந்த ராசியைச் சேர்ந்த பெண்மணிகளுக்கு வீட்டிலும், பணியிலும் இதுவரையிலும் இருந்துவந்த பிரச்னைகள் எல்லாம் விலகும். அதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். விலகிச் சென்ற உறவுகள் உங்களின் அன்பையும் பண்பையும் புரிந்துகொள்வார்கள்.
14. சொந்தத் தொழிலில், உங்களின் புது முயற்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் யாவும் விலகும். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களை விட்டுப்பிடியுங்கள். ஊழியர்களை இயன்றவரையிலும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள்; லாபமும் முன்னேற்றமும் அதீத அளவில் பெருகும்.
15. உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் யாவும் பூர்த்தியாகும். எனினும் தேவையில்லாமல் குழப்பங்கள் உள்ளுக்குள் எழும். அவற்றைத் தாண்டி `வெற்றி நிச்சயம்’ என்பதை நம்பிச் செயல்படுங்கள்; பொற்காலம் காத்திருக்கிறது!