சாவர்க்கர் வழக்கில் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தெரிவித்ததாவது, ராகுல் காந்தியின் கருத்துகள் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவராக அவரது கருத்துகள் பொறுப்பற்றவையாகக் கொள்ளப்படுகிறது. இனிவரும் காலங்களில், இவ்வாறு சுதந்திரப் போராட்ட வீரர்களை கேலி செய்ய வேண்டாம். மகாத்மா காந்திகூட ஆங்கிலேயர்களைத் தொடர்புகொண்டபோது, உங்களின் விசுவாசமான ஊழியர் என்று குறிப்பிட்டது, ராகுல் காந்திக்கு தெரியுமா? அவர்கள் நமக்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தனர்; ஆனால், அவர்கள் மீது நீங்கள் இவ்வாறான கருத்துகளைக் கூறுகிறீர்கள்.
மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில் கடந்த 2023ஆம் ஆண்டில், பாரத் ஜோடோ நடைப்பயணத்தின்போது செய்தியாளர்களுடன் பேசும்போது சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக லக்னெள மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் போன்றோர் சிறையில் வாடியிருந்தபோது, சாவர்க்கர் மட்டும் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியதாகவும், முஸ்லிம் நபர் ஒருவரை சாவர்க்கர் தாக்கியதாக சாவர்க்கரின் புத்தகத்திலேயே குறிப்பிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள் பாஜக உள்பட பல்வேறு தரப்பினரிடையே கண்டனங்களை எழுப்பியது.
இதனையடுத்து, தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யுமாறு அலாகாபாத் நீதிமன்றத்தில் ராகுல் மனு அளித்தார். இருப்பினும், அவரது மனுவை அலாகாபாத் நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். தன் மீதான அவதூறான சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக சுதந்திரமாகக் கடமையைச் செய்ய தடையாக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, மன்மோகன் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ராகுல் காந்தி மீதான அலாகாபாத் நீதிமன்றத்தின் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதையும் படிக்க:பந்திபோராவில் பயங்கரவாதி அல்தாஃப் லல்லியை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்!