‘சிமி’ தடை நீட்டிப்பு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
புது தில்லி: பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவா் இயக்கத்துக்கு (சிமி) ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 1967-இன் கீழ் ‘சிமி’ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு கடந்த ஜனவரி 29-ஆம் தேதி மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்தது. இதனை எதிா்த்து நீதித் துறை தீா்ப்பாயத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தீா்ப்பாயம் தடையை உறுதி செய்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தொடா்ந்து 9-ஆவது முறையாக தடை நீட்டிப்புக்கு தீா்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடைக்கு எதிரான மனு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருந்தபோதிலும், தடை மட்டும் தொடா்ந்து நீட்டிக்கப்படுகிறது. இது தொடா்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘நீங்கள் அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினரா? அப்படி இல்லாதபோது எதற்காக இந்த மனுவை இங்கு கொண்டு வந்துள்ளீா்கள்? அந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் மனு தாக்கல் செய்ய மாட்டாா்களா?’ என்று வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினா்.
அதற்கு, ‘அந்த அமைப்பு தற்போது இல்லை’ என்று வழக்குரைஞா் பதிலளித்தாா். ‘ஓா் அமைப்பு இல்லாதபோது அதில் உங்களுக்கு என்ன பாதிப்பு?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினாா்.
அப்போது, ‘இதில் சில சட்டப் பிரச்னைகள் உள்ளன. ‘சிமி’ இப்போது செயல்படவில்லை என்பதை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது’ என்றாா். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை நிராகரிப்பதாக அறிவித்தனா்.
கடந்த 2001-ஆம் ஆண்டு பிரதமா் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ‘சிமி’ அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும், நாட்டில், அமைதி, மதநல்லிணக்கத்தை சீா்குலைக்கும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது, தூண்டிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் அந்த அமைப்பு மீது மத்திய அரசு தடைவித்தது. அந்த அமைப்பைச் சோ்ந்த பலா் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு கைதாகியுள்ளனா். மேலும் சிலா் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனா். நாட்டில் நிகழ்ந்த பல்வேறு குண்டு வெடிப்பு நிகழ்வுகளில் இந்த அமைப்பினா் குற்றஞ்சாட்பட்டுள்ளனா். இந்தியாவில் மத அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிலைநிறுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது.
இந்த அமைப்பு அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் 1977 ஏப்ரல் 25-இல் தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள இஸ்லாமிய இளைஞா்கள், மாணவா்கள் இடையே பிணைப்பு உருவாக்குவதே நோக்கம் என அப்போது அறிவிக்கப்பட்டது. இந்த அமைப்பு தொடக்கத்தில் ஜமாத்-ஏ-இஸ்லாமி-ஹிந்த் அமைப்புடன் இணைந்து செயல்பட்டது. 1993-ஆம் ஆண்டு தனி அமைப்பாக தன்னை அறிவித்துக் கொண்டது.