சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது
சிறுவன் கடத்தல் வழக்கு : `யார் இந்த மகேஷ்வரி?’ - ஜெயராமன், பூவை ஜெகன்மூர்த்தி கொடுத்த பதில்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு கலாம்பாக்கம் கிராமம் வங்கித் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரின் மூத்த மகன் தனுஷ் (22). இளையமகனுக்கு 17 வயதாகுகிறது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய ஸ்ரீயும் (21) தனுஷும் காதலித்தனர். பின்னர் இருவரும் சென்னையில் கடந்த 15.4.2025-ல் சுயமரியாதை திருமணம் செய்தனர். இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விஜயஸ்ரீயின் குடும்பத்தினர், திருவள்ளூர் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்தனர்.
சிறுவன் கடத்தல்!
அதன்பேரில் கடந்த 9.5.2025-ல் தனுஷ், விஜயஸ்ரீ ஆகியோர் நேரில் சென்று விளக்கம் அளித்தனர். இந்தநிலையில் கடந்த 7.6.2025-ம் தேதி நள்ளிரவில் 12 மணியளவில் லட்சுமி குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், வீட்டின் மாடியில் தூங்கிய லட்சுமியின் இளைய மகனை காரில் கடத்தினர். அதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி, உடனடியாக காவல் கட்டுப்பாட்டறையின் எண் 100-க்கு போன் செய்து விவரத்தைக் கூறினார்.
அதிகாலை 3 மணியளவில் TN 06 G 0606 என்ற பதிவு எண் கொண்ட காரில் பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறுவனை அந்தக் கும்பல் இறக்கி விட்டு சென்றது. இதுதொடர்பாக திருவலாங்காடு காவல் நிலையத்தில் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

ஜெகன்மூர்த்தி தொடர்பு?
இந்த வழக்கில் சிறுவன் கடத்தல் சம்பவத்தில் விஜயஸ்ரீயின் அப்பா தேனியைச் சேர்ந்த வனராஜா, அவரின் உறவினர்கள், நண்பர்கள் மணிகண்டன், கணேசன், புரோக்கராக செயல்பட்ட மகேஷ்வரி, வழக்கறிஞர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் புரோக்கர் மகேஷ்வரியிடம் விசாரித்தபோது கடத்தல் சம்பவத்துக்கு ஏடிஜிபி ஜெயராமனின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் வாகனம் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அதோடு கே.வி.குப்பம் தொகுதியின் எம்.எல்.ஏவும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான ஜெகன்மூர்த்திக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூரில் உள்ள ஜெகன்மூர்த்தியின் வீட்டுக்கு டி.எஸ்.பி தமிழரசி தலைமையிலான போலீஸ் டீம் சென்றது. ஆனால் போலீஸாரை வீட்டுக்குள் அனுமதிக்காத வகையில் கட்சித் தொண்டர்கள் குவிந்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப்பிறகு ஜெகன் மூர்த்தியின் வீட்டுக்குள் போலீஸார் சென்றனர். ஆனால் அங்கு ஜெகன்மூர்த்தி இல்லை.
இந்தநிலையில்தான் முன்ஜாமீன் கேட்டு ஜெகன்மூர்த்தி கடந்த 16-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், முன்ஜாமீன் மனுவை பெண்டிங் வைத்ததோடு ஜெகன்மூர்த்தியை போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படியும், ஏடிஜிபி ஜெயராமனிடம் போலீஸார் உடனடியாக விசாரணை நடத்தும்படியும் உத்தரவிட்டார். அதனால் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு போலீஸ் சீருடையில் வந்திருந்த ஏடிஜிபி ஜெயராமன், திருவலாங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
நேற்றிரவு (16.5.2025) திருவலாங்காடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அறையில் வைத்து டி.எஸ்.பி தமிழரசி தலைமையிலான போலீஸ் டீம் ஜெயராமனிடம் விசாரணையை தொடங்கியது. விசாரணை நடந்துக் கொண்டிருந்த நேரத்தில் சொகுசு கார் உள்பட இரண்டு கார்களில் வழக்கறிஞர் டீம் ஒன்று அங்கு வந்தது. அவர்கள் ஜெயராமனுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், வழக்கின் விவரங்களை சேகரித்ததோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வேலையை விடிய விடிய செய்தனர்.
அதோடு ஜெயராமனையும் சந்தித்து சில விவரங்களை கேட்டறிந்தனர். திருவலாங்காடு காவல் நிலையத்தில் ஜெயராமனிடம் விசாரணை முடிந்ததும் திருத்தணி டி.எஸ்.பி அலுவலகத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டி.எஸ்.பி அறையில் வைத்து டி.எஸ்.பி-க்கள் தமிழரசி, கந்தன், புகழேந்தி ஆகியோர் கொண்ட போலீஸ் டீம் ஜெயராமனிடம் விசாரணை நடத்தி வருகிறது. காலை உணவாக ஜெயராமன் கேட்டதை போலீஸ் டீம் வாங்கிக் கொடுத்தது. அதோடு பிளாஸ்க்கில் டீ, காபியையும் அடிக்கடி போலீஸார் வாங்கிக் கொண்டு டி.எஸ்.பி அலுவலகத்துக்குள் சென்றனர்.
ஜெயராமனிடம் விசாரணை நடந்துக் கொண்டிருக்கும்போதே உள்துறை அலுவலகத்திலிருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான ஆர்டர் வந்தது. அதை ஜெயராமனிடம் போலீஸ் அதிகாரி ஒருவர் கொடுத்தார். ஆர்டரைப் பார்த்த ஜெயராமன், நெக்ஸ்ட் கேள்வி என போலீஸ் டீமைப் பார்த்து கேட்டிருக்கிறார். விசாரணைக் குழுவில் உள்ள டி.எஸ்.பி-க்கள் ஜெயராமனிடம் சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான புரோக்கர் மகேஷ்வரியை உங்களுக்குத் தெரியுமா, அவர் உங்களிடம் யார் மூலம் அறிமுகமாகினார் என மகேஷ்வரியை மையப்படுத்தியே கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு அவர், `மகேஷ்வரியை ஆன்மீக ரீதியாக எனக்குத் தெரியும் என்று கூறியதோடு அவரும் நானும் போனில் பேசிக் கொள்வோம். அதே நேரத்தில் சிறுவன் கடத்தல் வழக்குக்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை’ என கூறியிருக்கிறார். என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள காரை சிறுவன் கடத்தல் சம்பவத்துக்கு பயன்படுத்திய தகவல் எனக்குத் தெரியாது என கூறியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெயராமனிடம் திருத்தணி டி.எஸ்.பி அலுவலகத்தில் விசாரணை நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் திருவலாங்காடு காவல் நிலையத்துக்கு ஜெகன்முர்த்தி எம்.எல்.ஏ வந்தார். அவரிடம் போலீஸ் டீம், சிறுவன் கடத்தல் சம்பவம் குறித்து விசாரித்தனர். அப்போது அவர், `எனக்கும் சிறுவன் கடத்தல் சம்பவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை’ என கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை
இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஏடிஜிபி ஜெயராமனிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் வழக்கு தொடர்பான கேள்விகளைக் கேட்கப்பட்டது. அவர் காவல்துறையின் உயரதிகாரி என்பதால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். ஜெயராமனிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியதுள்ளதால், நோட்டீஸ் கொடுத்து விசாரிப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.
ஜெகன்மூர்த்தியை பொறுத்தவரை அவரிடமும் சிறுவன் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக மகேஷ்வரி, வழக்கறிஞர் சரத்குமார் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சாமர்த்தியமாகவே பதிலளித்தார். அவரிடமும் விசாரணை நடத்த வேண்டியதுள்ளது. விசாரணைக்குப் பிறகுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
இதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரி ஜெயராமன் தரப்பில் சிலரிடம் பேசினோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராமனுக்கு எதிராக சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் ஆதாரங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிலடி கொடுக்கப்படும்.
சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். ஆனால் அதற்குள் ஏடிஜிபி ஜெயராமன் கைது என மீடியாக்களில் செய்திகள் தவறுதலாக பரப்பப்படுகின்றன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டால்தான் கைது என்று சொல்ல முடியும். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி முதற்கட்ட விசாரணைநடந்து வருகிறது" என்றனர்.