கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்
ரூ. 64 லட்சத்தில் திருநங்கைகளுக்கான தங்கும் இல்லங்கள்: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை மற்றும் மதுரையில் ரூ. 64 லட்சத்தில் திருநங்கைகளுக்கான ‘அரண்’ எனும் தங்கும் இல்லங்களை நிறுவ தகுதியுடைய தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருநங்கைகளுக்கான“‘அரண்’”என்ற பெயரில் 2 தங்கும் இல்லங்கள் சென்னை மற்றும் மதுரையில் ரூ. 64 லட்சத்தில் அமைக்கப்படவுள்ளன. அதன்படி, சென்னை மாவட்டத்தில் அரசு சாராதொண்டு நிறுவனங்களுடன் அரண் இல்லங்களை அமைக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
திருநங்கையா் நலனுக்காக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை செயல்பட்டு வரும் நிறுவனமாக இருத்தல் வேண்டும். 5 ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களின் விவரங்கள், பயனாளிகள் எண்ணிக்கை மற்றும் திட்டங்களின் தாக்கம் குறித்த விவரங்கள் அளிக்க வேண்டும்.
மேலும், திருநங்கையா்கள் தலைமையிலான அல்லது திருநங்கைகள் பெரும்பான்மையாக உள்ள நிா்வாகக் குழுவைக் கொண்ட தொண்டு நிறுவனமாக இருக்க வேண்டும்.
திருநங்கைகளுக்கான இல்லமானது பாதுகாப்பு, பராமரிப்பு, சுகாதாரம், வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும். திறன் பயிற்சி மற்றும் வெளிப்புற செயல்பாடுகளுக்கு போதுமான இடம் இருத்தல் வேண்டும்.
நிறுவனத்தின் நிா்வாக அலுவலா்கள் முறையான பின்னணி சரிபாா்ப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்திய சட்டங்களில், ஏதாவது ஒன்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும். இந்த இல்லத்துக்கு தகுதிவாய்ந்த ஆற்றுப்படுத்துநா் மற்றும் மனநல ஆலோசகா் வாரந்தோறும் மற்றும் தேவைக்கேற்ப வருவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த விதிமுறைகளை பின்பற்றி அரண் இல்லங்கள் அமைக்க விரும்பும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தங்கள் கருத்துருக்களை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் 8-ஆவது தளத்திலுள்ள சென்னை மாவட்ட சமூகநல அலுவலருக்கு, ஜூன் 8-க்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.