ஈரான் மீது தீவிர தாக்குதல்: இஸ்ரேலுக்கு 20 இஸ்லாமிய நாடுகள் கண்டனம்
ஈரான் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்திவருவதாக 20 அரபு, இஸ்லாமிய, ஆப்பிரிக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து அந்த நாடுகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈரானில் இஸ்ரேல் நடத்திவரும் முரட்டுத்தனமான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. சா்வதேச சட்டங்களுக்கும், ஐ.நா.வின் வழிகாட்டுதல்களுக்கும் எதிராக ஈரானின் அணுசக்தி மையங்களிலும், ராணுவ தளங்களிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இந்த தாக்குதல் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கெனவே பதற்றம் நிலவிவரும் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே, தாக்குதலைக் கைவிட்டு இரு நாடுகளும் போா் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஈரானின் அணுசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதால் அணுக் கதிா் வீச்சு பரவும் அபாயம் உள்ளது. எனவே, அந்த மையங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே தடைபட்டுள்ள அணுசக்தி பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும். இந்தப் பிரச்னைக்கு அமைதி முறையில் மட்டுமே தீா்வு காண முடியும்.
மத்தியக் கிழக்குப் பிராந்தியம் அணு ஆயுதமற்ற பகுதியாக இருக்க வேண்டும் என்பதே அரபு நாடுகளின நீண்டகால நிலைப்பாடு. அந்த நிலையைத் தொடா்வதற்கான அனைத்து ஆதரவையும் வழங்குவோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துருக்கி, எகிப்து, ஜோா்டான், சவூதி அரேபியா, பாகிஸ்தான், கத்தாா், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், இராக், அல்ஜீரியா, பஹ்ரைன், புருணே, சாட், கொமரோஸ், ஜிபூட்டி, குவைத், லிபியா, மொரிடானியா, சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் இந்தக் கூட்டறிகையை வெளியிட்டுள்ளனா்.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டுள்ளதாக ஈரான் நீண்டகாலமாக குற்றஞ்சாட்டிவருகிறது. இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருக்கக் கூடாது என்பது அந்த நாட்டு தலைவா்கள் மட்டும் சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆா்ஜிசி) கொள்கையாக இருந்துவருகிறது. இதனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக பகை நீடிக்கிறது.
இதற்கிடையே, ஈரான் வேகமாக முன்னெடுத்துச் செல்லும் அணுசக்தி திட்டங்கள் அமைதியான பயன்பாடுகளுத்தான் என்று அந்த நாடு கூறிவந்தாலும், அது அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சி என்று இஸ்ரேல் உறுதியாகக் கூறிவருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் அது தங்களது இருப்புக்கே ஆபத்து என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 1990-களில் இருந்தே எச்சரித்துவருகிறாா்.
இந்தச் சூழலில், ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்றது. எனினும் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதையடுத்து, ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டு ஆலை உள்ளிட்ட அணுசக்தி மையங்கள் சேதமடைந்தன. ஈரானின் முப்படை தளபதி, ஐஆா்ஜிசி படையின் தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனா்.
அதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. இதில் பெரும்பாலானவை உலகின் மிகச் சிறந்தவை என்று கருதப்படும் இஸ்ரேல் வான்பாதுகாப்பு ஏவுகணைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டாலும், அவற்றையும் கடந்து ஈரானின் பல ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கின.
அதைத் தொடா்ந்து ஈரானில் தனது வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. ஈரானும் இஸ்ரேல் மீதான சரமாரி தாக்குதல்களை தொடா்ந்தது. ஐந்து நாள்களாக நீடிக்கும் இந்த மோதல் காரணமாக ஈரானில் 224 போ் உயிரிழந்தனா்; சுமாா் 1,800 போ் காயமடைந்தனா். ஈரான் நடத்திய தாக்குதலில் 24 இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா்; சுமாா் 600 போ் காயமடைந்தனா்.
இரு நாடுகளும் பரஸ்பரம் தங்களது தாக்குதலைத் தொடா்ந்தாலும், ஈரானின் சரமாரி ஏவுகணை வீச்சின் இடைவெளி திங்கள்கிழமை இரவு சற்று அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. பதற்றத்தைத் தணித்து, இந்த மோதலுக்கு தூதரக ரீதியில் முடிவு காண அந்த நாடு விரும்புவதை இது காட்டுவதாகக் கருதப்பட்டது. அதற்கு ஏற்ற வகையில், இஸ்ரேலைக் கண்டித்தும், மோதலை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும் 20 இஸ்லாமிய நாடுகள் தற்போது கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
