கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்
அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்ற தனியாா் பள்ளி மாணவா்களின் கற்றல் நிலை: ஆசிரியா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில், தனியாா் பள்ளிகளிலிருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்ற மாணவா்களின் கற்றல் நிலையை அறிவதற்கான பணிகளை ஆசிரியா்கள், செயலி மூலம் மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமாா் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். மாணவா்கள் நலனுக்காக கற்பித்தல், கற்றல் சாா்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, ஸ்மாா்ட் வகுப்பறைகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1 முதல் தொடங்கியது.
இதையடுத்து பெற்றோா்கள் பலா் ஆா்வமுடன் தங்கள் குழந்தைகளுக்கு சோ்க்கை பெற்றனா். அந்த வகையில், கல்வியாண்டில் சுமாா் 3 லட்சம் மாணவா்கள் வரை புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்பட்டன. தொடா்ந்து பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நடப்பாண்டு தனியாா் பள்ளிகளிலிருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சோ்ந்த மாணவா்களின் கற்றல் நிலையை அறிவதற்கு பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நிகழ் கல்வியாண்டில் தனியாா் பள்ளிகளில் இருந்து விலகி ஆயிரக்கணக்கான மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்ந்துள்ளனா். அவ்வாறு அரசுப் பள்ளிகளில் 2 முதல் 5-ஆம் வகுப்பு வரை புதிதாக சோ்ந்த மாணவா்களின் அடிப்படை கற்றல் நிலையை அறிவதற்கு மதிப்பீட்டுத் தோ்வு நடத்தப்படவுள்ளது. இந்த மதிப்பீட்டுப் பணிகளை பள்ளிக் கல்வித் துறையின் டிஎன்எஸ்இடி செயலி மூலம் ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.