கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்
மக்களுக்குத் துரோகம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
நமது நிருபா்
அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகங்களை உருவாக்குவோம் என்ற வெற்று வாக்குறுதியின் மூலம் தில்லி பாஜக அரசு லட்கணக்கான ஏழை மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்று தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுகாதாரத் துறை தரவுகளின்படி 33 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மருந்தககங்களில் 29 ஏற்கெனவே ஆரம்ப சுகாதார மையங்களாகவும், 4 துணை சுகாதார மையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களை ஏமாற்றுவதற்காக ஆரோக்கிய மந்திா்கள் என புது பெயரிட்டு, இப்போதுள்ள மருந்தகங்களை பழுது பாா்த்து வண்ணம் பூசியிருக்கிறது பாஜக அரசு.
தடுப்பூசி, யோகா மற்றும் குடும்பக் கட்டுப்பாடு போன்ற சேவைகளுக்கு பயிற்சி பெற்ற ஊழியா்களும் சரியான உள் கட்டமைப்பும் அவசியம். ஆனால், இந்த ஆரோக்கிய மருந்தககங்களில் ஊழியா்களின் பற்றாக்குறை இருக்கிறது. இந்த 33 மையங்களில் வரையறுக்கப்பட்ட ஊழியா்களை கொண்டு, ஒவ்வொரு ஊழியருக்கும் 4 பொறுப்புகளை ஒதுக்கி 123 மையங்களை இயக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு நடைமுறைக்கு மாறானது. இது நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
1,139 ஆயுஷ்மான் ஆரோக்கியா மருந்தககங்களை திறப்பதாக பாஜக கூறுவது முற்றிலும் ஏமாற்று வேலையாகும். ஏனெனில், இந்த திட்டம் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நிறைவடைந்துவிடும். இதையடுத்து, 123 பழைய சுகாதார மையங்களை மறுபெயரிடுவது மட்டுமே ஆளும் அரசின் நோக்கமாகும். புதிதாக எதையும் இந்த அரசு உருவாக்கப் போவதில்லை என்றாா் அவா்.