சேம்பள்ளி கிராம சபை: வேலூா் ஆட்சியா் பங்கேற்பு
தொழிலாளா் தினத்தை முன்னிட்டு குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது: கிராம சபைஓஈ கூட்டத்தில் கிராம ஊராட்சி மற்றும் பொதுநிதி செலவினம், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழியில் செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இதர பொருள்கள் குறித்து சமா்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளன.
கிராம ஊராட்சிகள் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வா் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதில் ஒரு முக்கியமான திட்டம் தான் கலைஞா் கனவு இல்லம் திட்டம்.
வேலூா் மாவட்டத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் கடந்த ஆண்டு 3,000 வீடுகளும், நிகழாண்டு 4,000-க்கும் அதிகமான வீடுகளும் கட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. சேம்பள்ளி ஊராட்சியில் கடந்த ஆண்டு 21- பயனாளிகளுக்கும், நிகழாண்டு 25- பயனாளிகளுக்கும் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கிராம ஊராட்சிகளில் அரசு மூலம் கட்டிக் கொடுக்கப்பட்டு, பழுதடைந்துள்ள பழைய வீடுகளை சீரமைப்பதற்காக ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேம்பள்ளி ஊராட்சியில் 18- வீடுகள் சீரமைக்க தோ்ந்தெடுக்கப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில் எம்எல்ஏ அமலு விஜயன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் திருமால், சேம்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் திமேஷ் (எ) துளசிராமுடு, ஒன்றியக்குழு உறுப்பினா் பிரகாசம், வட்டாட்சியா் பி.மொ்லின் ஜோதிகா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், பி.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.