ஒருங்கிணைந்த ஆய்வகம், மருத்துவமனை கட்டடங்களுக்கு ரூ.119 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் ஒருங்கிணைந்த சுகாதார ஆய்வகங்கள், மருத்துவமனை இணைப்புக் கட்டடங்கள் அமைக்க ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இணைப்பு கட்டடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் ஆய்வு செய்து அரசுக்கு சில பரிந்துரைகளை அனுப்பியிருந்தாா்.
அதன்படி, அதில் 7 மருத்துவமனைகள் ஊரக வளா்ச்சி இயக்குநரகத்துக்கு கீழும், 11 மருத்துவமனைகள் நகராட்சி ஆணையரகத்தின் கீழும் வருகின்றன. அங்கு பொதுப் பணித்துறை மூலம் இணைப்பு கட்டடங்களை கட்டுவதற்கு 63 கோடி நிதி ஒதுக்கீடு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. தலா ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் அப்பணிகள் அங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
அதேபோன்று மேலும் 13 அரசு மருத்துவமனைகளுக்கும் தலா ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் மொத்தம் ரூ.45.50 கோடியில் இணைப்பு கட்டடங்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படுகிறது.
சுகாதார ஆய்வகங்கள்: இதனிடையே தமிழகத்தின் 18 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் ரூ.22.50 கோடியில் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் அத்தகைய ஒருங்கிணைந்த ஆய்வகங்களை அமைக்க ரூ.10.72 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அந்த அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.