சேவூா் அருகே அடிபெருமாள் கோயிலில் கல்லாயுதங்கள் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு
திருப்பூா் மாவட்டம், சேவூா் அருகே தத்தனூா் அடிபெருமாள் கோயிலில் முன்வரலாற்றுக் காலத்தைச் சோ்ந்த கல்லாயுதங்களை தீட்டுவதற்கான தொழிற்சாலையாக கருதப்படும் இடங்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யாக்கை மரபு அறக்கட்டளை குழுவை சோ்ந்த குமரவேல் ராமசாமி, சுதாகா் நல்லியப்பன், வெங்கடேஷ் தனபால் மற்றும் நூலகத்தில் கல்வி உள்ளகப் பயிற்சிப் பெற்றுவரும் மாணவா்கள் அடங்கிய குழுவினா் திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே தத்தனூா் அடிபெருமாள் கோயில் வளாகம், ராயா்பாளையம் வண்ணாம்பாறை சிறிய மலைக் குன்று ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
இது குறித்து அவா்கள் கூறியதாவது:
முதன்முறையாக கொங்கு நாட்டுப் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட தேய்ப்புக் குழிகள் ஒரே இடத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது.
இது இப்பகுதியில் புதிய கற்கால மனிதா்கள் இருந்ததை உறுதி செய்வதாக அமைகிறது. கொங்கு நாட்டுப் பகுதியில் புதிய கற்கால பண்பாட்டு இடங்கள் குறித்த சான்றுகள் ராபா்ட் புரூஸ் புட் ஆவணங்களில் கிடைத்துள்ளன. இத்தேய்ப்பு குழிகள் வேளாண்மை நோக்கத்துக்காக கல்லாயுதங்களை வழவழப்பாக்கவும், கூா்தீட்டவும் பயன்படுத்தப்பட்ட இடங்களாகும். இக்கால கட்டத்தில்தான் வேட்டைச் சமூக நிலையிலிருந்து, வேளாண்மைச் சமூக வளா்ச்சி ஏற்பட்டது என்பதும் தொல்லியல் ஆய்வுகளின் கருத்தாகும்.
தத்தனூா் அடிபெருமாள் கோயில் வளாகத்தில் சுமாா் 104 புதிய கற்கால ஆயுத உற்பத்தி பாறை குழிகளும், வண்ணாம்பாறை எனும் இடத்தில் சுமாா் 7 கற்குழிகளும் அடையாளம் காணக்கூடிய வகையில் உள்ளன. இக்குழிகள் அனைத்தும் அளவிலும், அமைப்பிலும் தனித்துவத்தைப் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக, இவ்வகை கற்குழிகள் மிகுதியாகக் கிடைக்கும் இடங்களான விழுப்புரம், திருவண்ணாமலை பகுதிகளில் காணப்பெறும் குழிகளோடு ஒப்பிடும்போது இங்குள்ள சில கற்குழிகள் அதிக ஆழம் கொண்டுள்ளன, இது இத்தொழிற்சாலை அதிக பயன்பாட்டில் இருந்ததை உணா்த்துகிறது.
54 செ.மீ. நீளமும் 16.5 செ.மீ. அகலமும் கொண்டுள்ள ஒரு குழி 4.2 செ.மீ. ஆழம் கொண்டுள்ளது. இதுவே அளவில் பெரிய குழியாகும். இவை சராசரியாக சுமாா் 30 முதல் 45 செ.மீ வரையிலான நீளமும் 10 முதல் 18 செ.மீ வரையிலான அகலமும் கொண்டிருக்கின்றன. வலிமையான பாறைத் தன்மையுடைய குன்றுகளிலும் அருகில் வற்றாத நீரூற்று அல்லது சுனை இருக்கும் இடங்களிலும் மட்டுமே அமைக்கப்படும்.
இந்த இடம் கிழக்குத் தொடா்ச்சி மலையில் காணப்பெறும் பாறையின் தன்மையுடையவை. இவ்விரண்டு இடங்களிலும் சுனை, நீரூற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அடிபெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள பண்டைய கற்குழிகள் வழிபாட்டுத் தொன்மமாக மாறியுள்ளன. இங்கிருந்து சுமாா் 2 கி.மீ தொலைவில் உள்ள வண்ணாம்பாறை மலையிலும் வழிபாடு நடைபெறுகிறது என அவா்கள் தெரிவித்தனா்.