ஜம்மு - காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டது: மத்திய அமைச்சர்
புது தில்லி: ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்குப் பின் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது: ”இன்று பஹல்காமுக்குச் சென்ற நான், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா துறை வளர்ச்சியடைந்து வருகிறது. இயல்புநிலை திரும்பியுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறேன்” என்றார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்த பகுதியில் ரயில் வசதியின்றி பல ஆண்டுகளாக காத்திருந்ததற்கு பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இப்போது இந்த பகுதிகளுக்கு ரயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பதவியேற்ற கடந்த 11 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும், புது மைல்கல் சாதனையை எட்டுகிறோம். உள்கட்டமைப்பு, அரசு நிர்வாகம், தொழில்நுட்பம், இளைஞர் மேம்பாடு இப்படி எந்த துறையானாலும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.
கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் உள்ள எந்தவொரு அமைச்சர் மீதும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. ஆனால், அதற்கு முந்தைய ஆட்சியில் முறைகேடு நடைபெறுவதே வாடிக்கையாக இருந்து வந்திருக்கிறது” என்றார்.