பி-2 விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதா?
ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் பி-2 போர் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக பரவும் தகவலை மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு மறுத்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக போரில் இணைந்த அமெரிக்கா, எவ்வித அறிவிப்பும் இன்றி, சனிக்கிழமை நள்ளிரவு (இந்திய நேரப்படி) ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
’ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளவாடங்களை பி-2 போர் விமானங்கள் மூலம் துல்லியமாகத் தாக்கி அமெரிக்கா சேதப்படுத்தியுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்கா இணைந்திருப்பது உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி இன்று தொலைப்பேசியில் உரையாடினார்.
ஈரானில் சமீபத்தில் நிலவிவரும் பதற்றம் வருத்தம் அளிப்பதாகவும், அங்கு உடனடியாக அமைதி திரும்ப வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதலை ரகசியம் காப்பதற்காக பி-2 போர் விமானங்கள் நேரடியாகச் சென்று தாக்குதல் நடத்தாமல் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக செய்திகள் பரவின.
CONFIRMED: Indian airspace was used by U.S. forces to strike Iran.
— Sahar Emami (@iamSaharEmami) June 22, 2025
New Delhi’s quiet complicity now places it on the wrong side of history.
Iran will not forget. pic.twitter.com/cuuIeKKjXw
மேற்கு பசிபிக்கில் உள்ள குவாம் தீவில் இருந்து புறப்பட்ட பி-2 விமானங்கள், அந்தமான் தீவுகள், மத்திய இந்தியப் பகுதி வழியாக ஈரான் துருப்புகளை அழித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசு அமைதி காப்பது ஏன்? என்று இணையத்தில் பலர் கேள்வி எழுப்பிய நிலையில், பி-2 விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தவில்லை என்று பிஐபி உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.
