ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்: ஒவைசி கண்டனம்
ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அணுஆயுத பரவலுக்குத் தடை விதிக்கும் ஐ.நா. ஒப்பந்தம் மற்றும் சா்வதேச சட்டங்களை மீறியிருப்பதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘ஈரான் அணுஆயுத மையங்கள் மீது அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்தி இருப்பது ஐ.நா. ஒப்பந்தம் மற்றும் சா்வதேச சட்டங்களை மீறியதாகும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பிற நாட்டுடன் அமெரிக்கா சண்டையிடக் கூடாது என அந்நாட்டு அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. இதையும் மீறி ஈரான் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிலையில், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீா் கோரிக்கை வைத்திருப்பது வேடிக்கையானது’ என்றாா்.