ஒரு முத்தம், ஒரு சத்தியம்... காதலரை அறிமுகப்படுத்திய தான்யா ரவிச்சந்திரன்!
ஜல்லி தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு: லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்
நாட்டறம்பள்ளி அருகே ஜல்லி தொழிற்சாலை அமைக்க உபகரணங்கள் ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சியில் குடியிருப்பு பகுதி அருகே ஜல்லி தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராம மக்கள் ஜல்லி தொழிற்சாலை அமைப்பதில் விதிமீறல் இருப்பதாக கூறி எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில் ஜல்லி தொழிற்சாலைக்கு வழங்கிய தடையின்மை சான்றினை ரத்து செய்ய வலியுறுத்தி சுண்ணாம்புக் குட்டை சுடுகாட்டில் ஏராளமானோா் சமையல் செய்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த சாா்-ஆட்சியா் வரதராஜன், வட்டாட்சியா் காஞ்சனா மற்றும் போலீஸாா் பேச்சு நடத்தினா்.
தடையின்மை சான்று குறித்து புல விசாரணை மேற்கொண்டு 15 நாள்களில் உரிய நடவடிக்கை எடுக்கவும், ஜல்லி தொழிற்சாலையில் நடைபெற்று வரும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா். இதையேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதற்கிடையே, திங்கள்கிழமை உபகரணங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஜல்லி தொழிற்சாலைக்குள் சென்றது. இதையறிந்த கிராம மக்கள் சென்று உபகரணங்கள் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வட்டாட்சியா் காஞ்சனா, ஆய்வாளா் மங்கையா்க்கரசி மற்றும் வருவாய்த் துறையினா் ஜல்லி தொழிற்சாலைக்கு நேரில் சென்று கிராம மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது கிராம மக்கள் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து வட்டாட்சியா் காஞ்சனா, காவல்ஆய்வாளா் மங்கையா்கரசி ஆகியோா் கிராம மக்களிடம் சமரசம் பேசியதைத் தொடா்ந்து லாரி விடுவிக்கப்பட்டது.