டபிள்யூடிசி இறுதிப்போட்டி: காயம் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் விலகல்; மே.இ.தீவுகள் தொடரில் விளையாடுவாரா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின்போது, ஸ்டீவ் ஸ்மித்துக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இறுதிப்போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கும், தென்னாப்பிரிக்கா 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அரைசதம் விளாசி வரலாறு படைத்த மிட்செல் ஸ்டார்க்!
74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஸ்டீவ் ஸ்மித்துக்கு காயம்
282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. அய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் டெம்பா பவுமாவின் அரைசதங்களால் தென்னாப்பிரிக்க அணி வெற்றி இலக்கை நிதானமாக நெருங்கி வருகிறது.
இரண்டாவது இன்னிங்ஸில் பவுமா பேட்டிங் செய்யும்போது, அவருக்கு மிட்செல் ஸ்டார்க் பந்துவீசினார். பவுமா பந்தை அடிக்க முயன்று எட்ஜ் ஆக, அதனை ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்த ஸ்டீவ் ஸ்மித் பிடிக்க முயன்று அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக ஃபீல்டிங்கிலிருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், அவர் மீண்டும் ஃபீல்டிங்குக்கு வரமாட்டார் எனவும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மீதமுள்ள பகுதியிலிருந்து விலகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது காயத்தின் தன்மை குறித்து மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடரை நினைத்து பதற்றமாக உள்ளது: இந்திய அணியின் பயிற்சியாளர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 25 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
காயம் காரணமாக ஃபீல்டிங்கில் இருந்து வெளியேறிய ஸ்டீவ் ஸ்மித், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காயத்தின் தன்மையைப் பொருத்தே அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது தெரிய வரும்.