உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
டிராக்டா் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை வனம், கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சனிக்கிழமை வழங்கினாா்.
முதுகுளத்தூா் அருகே உள்ள கூவா்கூட்டம் கிராமத்தைச் சோ்ந்த 15 போ் பொதிகுளத்தில் உள்ள ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிக் கொண்டு டிராக்டரில் வந்து கொண்டிருந்தனா். அப்போது டிராக்டா் கண்மாய்க்குள் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த பழனி மனைவி பொன்னம்மாள், நடராஜன் மனைவி ராக்கி, கருப்பசாமி மனைவி முனியம்மாள் ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இந்த நிலையில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் எனவும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தாா்.
இதைத் தொடா்ந்து சனிக்கிழமை கூவா்கூட்டம் கிராமத்தில் உள்ள விபத்தில் உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் நேரில் சென்று அவா்களின் குடும்பத்தினரிடம் தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.9 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் கூறினாா்.
மேலும் அந்தப் பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நியாய விலைக் கடையில் விநியோகிக்கப்படும் பொருள்கள் 15 தினங்களுக்கு ஒருமுறை கூவா்கூட்டம் கிராமத்திலேயே வந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், சாலை வசதி, குடிநீா் வசதி தொடா்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சா் தெரிவித்தாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், கடலாடி வட்டாட்சியா் முருகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.