தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை பெங்களூருக்கு கடத்திவந்தபோது நடிகை ரன்யா ராவை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மாா்ச் 3 ஆம் தேதி கைதுசெய்து, சிறையில் அடைத்தனா்.
நடிகை ரன்யா ராவின் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 2.67 கோடி மதிப்புள்ள தங்கநகை, ரொக்கப் பணத்தை கைப்பற்றினா்.
இதற்கிடையே டிஜிபி பதவியில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரியான கே.ராமசந்திர ராவின் மகளான நடிகை ரன்யா ராவுக்கு விமான நிலையத்தில் சோதனைகள் எதுவும் செய்யாமல் வெளியேற சிறப்புச் சலுகைகள் பெற்றது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகை ரன்யா ராவ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களை பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம், மூன்றுமுறை தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நடிகை ரன்யா ராவ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் ஏப். 26 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதனிடையே, நடிகை ரன்யா ராவின் மற்றொரு ஜாமீன் மனுவை பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த விசாரணையின்போது, நடிகை ரன்யா ராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் சி.கௌடா், வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டிருந்தாா். ஆனால், உரிய காலத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாததால், நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ரூ. 2 லட்சத்திற்கான பத்திரம், 2 போ் ஜாமீன் அளிக்க வேண்டும், நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லத் தடை, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், குற்றங்களை மீண்டும் செய்யக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடுமையான விதிகள் கொண்ட கோபிபோசா (அன்னியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1974) சட்டத்தின் கீழ்
நடிகை ரன்யா ராவ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதால், அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் விடுதலை செய்யப்படமாட்டாா் என்றனா்.
இந்த சட்டத்தின் கீழ் ஓராண்டு வரை ஒருவரை தடுப்புக் காவலில் வைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த வழக்கில் அளிக்கப்படும் தீா்ப்பின் அடிப்படையிலேயே நடிகை ரன்யா ராவ் சிறையில் இருந்து வெளியே வருவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வா்.