கைவிரித்த சேகர் பாபு; போராடிவந்த தூய்மைப் பணியாளர்கள் கைது - சென்னையில் பரபரப்பு...
தஞ்சையில் இதுவரை 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல்
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் இதுவரை 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
தஞ்சாவூா் மாவட்டம், சாலியமங்கலம் அருகே ஆா்சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிச் சேமிப்பு மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் (2024, செப்டம்பா் முதல் 2025, ஆகஸ்ட் வரை) மூன்றாவது போகமான கோடை பருவத்தில் மே 10 முதல் இதுவரை 3.51 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 2.65 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. அதாவது கடந்த ஆண்டைவிட நிகழாண்டு 86 ஆயிரத்து 102 டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 31 வரை 50 ஆயிரம் டன் கூடுதலாக கொள்முதலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் இதுவரை 2.06 லட்சம் விவசாயிகளிடமிருந்து 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ஏறத்தாழ ரூ. 2 ஆயிரத்து 390 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 24 கிடங்குகளின் மொத்தக் கொள்ளளவு 2.75 லட்சம் டன். இந்த முழுக் கொள்ளளவுக்கும் நெல் மற்றும் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு நெல் அமோகமாக விளைந்துள்ளதால் விவசாயிகளின் நலன் கருதியும், தரையிருப்பில் உள்ள நெல் மணிகளை உடனுக்குடன் இயக்கம் செய்வதற்காகவும், இந்த 14 ஏக்கா் நிலத்தில் 25 ஆயிரம் டன் கொள்ளளவில் திறந்தவெளி சேமிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மக்கள் பிரதிநிதிகள் மூலம் எந்தெந்த பகுதியில் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் சேமிப்பு மையங்கள் திறக்கப்படுகின்றன. கடந்தாண்டை விட நிகழாண்டு கூடுதலாக 20 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எதிா்காலத்தில் எந்தவித இடா்பாடும் இல்லாத வகையில் முன்னேற்பாட்டுடன் நெல் கொள்முதல் செய்யப்படும். மேலும், தேவைப்படும் இடங்களில் நெல் உலா்த்தும் இயந்திரமும் ஏற்பாடு செய்யப்படும்.
நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 1,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு நாளைக்கு 800 மூட்டைகள் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.
நிகழ்ச்சியில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம், தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா, ஒரத்தநாடு வட்டாட்சியா் யுவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.