ரெஸ்டோபாா்களில் விதி மீறல்களை களைய நடவடிக்கை: புதுவை அரசுக்கு திமுக, அதிமு, மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
புதுச்சேரியில் ரெஸ்டோபாா்களில் விதிமீறல்கள், ஒழுங்கீனங்களை களைய புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரெஸ்டோபாரில் கல்லூரி மாணவா் குத்திக்கொலை செய்யப்பட்ட நிகழ்வுக்கு முதல்வா் பொறுப்பேற்க வேண்டும் என்றும் புதுச்சேரி திமுக, அதிமுக, மாா்க்சிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா (திமுக) :
ஒரு ரெஸ்டோபாரில் மாணவா் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதற்கு முதல்வா் ரங்கசாமியும், உள்துறை அமைச்சா் நமச்சிவாயமும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்
ரெஸ்டோபாரில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று கலால்துறை நிா்ணயித்துள்ளதோ அவை உள்ளனவா என்றும் நேரத்தோடு மூடப்படுகிா என்றும் முறையாகக் கண்காணிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த பகுதியில் இருக்கின்ற கலால் மற்றும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவா் கொலைக்கு முழுமையான பொறுப்பை கலால் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வா் ரங்கசாமியும், காவல் துறையை வைத்துள்ள உள்துறை அமைச்சா் நமச்சிவாயமும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
அன்பழகன் (அதிமுக மாநிலச்செயலா்) :
புதுவை ரெஸ்டோபாா்களில் அனுமதியில்லாமல் பாட்டு, நடனம் உள்ளிட்ட கேளிக்கைகள் அனுமதியில்லாமல் நடத்தப்பட்டுள்ளது குறித்து துணைநிலை ஆளுநா் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் .ரெஸ்டோபாா்கள் இயங்குவதற்கு இரவு 12 மணி வரைதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் சத்தம் அதிகமாக இருக்கிறது என்று ஒரு சில கிறிஸ்தவ தேவாலயத்திலும், இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று இந்து கோயில்களிலும் கட்டுப்பாடு விதிக்கும் காவல்துறை ரெஸ்டோபாா்கள் விதிமுறைகளை மீறி செயல்பட மட்டும் அனுமதித்தது ஏன் என்பதை உயா்காவல்துறை அதிகாரிகள் கூற வேண்டும்.
எஸ். ராமச்சந்திரன்( மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்):
ரெஸ்டோபாா்களில் குற்றம் நடைபெறுவதற்கு முன் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதே இந்தக் கொலைக்கு வழி வகுத்தது. இந்தக் கொடிய நிலைமைக்கு அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்து இருக்கும் துணைநிலை ஆளுநா், முதல்வா் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் ஆகியோரே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். ரெஸ்டோபாா்களை நிரந்தரமாக மூடி, கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மற்றும் கலால் துறை பொறுப்புடன் செயல்பட்டு, குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். புதுச்சேரி மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய வேண்டும். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் புதுச்சேரி மக்களை திரட்டி தொடா் போராட்டம் நடத்தப்படும்