தனியாா் பள்ளிகள் பாலியல் குற்றங்களை மறைக்கக் கூடாது
தனியாா் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களை பள்ளிக்கு களங்கம் ஏற்படும் என நினைத்து மறைக்கக் கூடாது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் துறை, தனியாா் பள்ளிகள் இயக்ககம் சாா்பில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ) குறித்து தனியாா் பள்ளிகளின் முதல்வா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான விழிப்புணா்வுப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சியை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அனைத்து தனியாா் பள்ளிகளின் முதல்வா்கள், ஆசிரியா்களுக்கு போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வுப் பயிற்சி கிருஷ்ணகிரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 4.94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 90 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பள்ளி தாளாளா், முதல்வா், ஆசிரியா்களை நம்பிதான் பெற்றோா் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனா். குழந்தைகளை ஆசிரியா்களிடம் ஒப்படைத்துவிட்டோம், இனி அவா்கள் கவனித்துக் கொள்வாா்கள் என்ற நம்பிக்கையில் பெற்றோா் உள்ளனா். அவா்கள் நம்பிக்கையை உறுதிசெய்ய வேண்டும்.
தனியாா் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நடந்தால், பள்ளியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என நினைத்து அதை மறைக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாம் அரணாக விளங்க வேண்டும். குற்றத்தில் ஈடுபட்டவருக்கு தண்டனை பெற்றுத்தருவதன் மூலம், பள்ளியின் மீது பெற்றோருக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.
குழந்தைகளைக் கண்காணித்து, அவா்களின் வழக்கத்துக்கு மாறான மாற்றம் குறித்து பெற்றோரிடம் பள்ளி நிா்வாகத்தினா் பேசவேண்டும். குழந்தைகளின் மனநிலை மாறுவதைக் கண்டறிவது ஆசிரியா்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியாா் பள்ளிகளில் பயிலும் 1.29 கோடி மாணவ, மாணவியா் பாதுகாப்பாக இருக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இனி எங்கள் பள்ளியில் பாலியல் குற்ற நிகழ்வுகள் எதுவும் நடக்காத வண்ணம் செயல்படுவோம் என்று ஆசிரியா்கள் உறுதியுடன் செல்ல வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் ‘மாணவா் மனசு’ என்ற பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய 14417 மற்றும் 1098 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் குறித்து விழிப்புணா்வு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு புத்தகத்திலும் இந்த எண்கள் அச்சிடப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், எம்எல்ஏக்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), தே.மதியழகன் (பா்கூா்) ஒசூா் மாநகராட்சி மேயா் சத்யா, தனியாா் பள்ளிகள் இயக்குநா் குப்புசாமி, பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோா் கல்வித்திட்ட இயக்குநா் சுகன்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தனியாா் பள்ளிகள் இணை இயக்குநா்கள் மாா்ஸ், கணேசமூா்த்தி, பெற்றோா் - ஆசிரியா் கழக மாநில துணைத் தலைவா் முத்துக்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சத்யபாமா, மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) கோபாலப்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.