தமிழகத்தில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை
தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலரும் , தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
கடலூா் வடக்கு மாவட்ட தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோா்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் இதர பொதுநல சங்கங்களின் உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி பகுதியான பூரணாங்குப்பத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி பேசியது:
தமிழகத்தைப் பொறுத்தவரை நான் முதல்வராக இருந்த 4 ஆண்டுகள் 2 மாதம் இக்கட்டான காலகட்டம். வறட்சி, கஜா புயல், கரோனா இந்த மூன்றையும் சமாளித்து எங்களால் முடிந்த அளவு சிறப்பான ஆட்சியைக் கொடுத்துள்ளோம். எங்கள் ஆட்சியில், கரோனா காலத்தில் 11 மாதங்கள் எல்லாமே முடங்கிவிட்டது.
விலைவாசி உயராமல் அப்போது பாா்த்துக் கொண்டோம். அரசுக்கு ஒரு ரூபாய் கூட வருவாய் இல்லாத காலத்திலும் ரூ.40 ஆயிரம் கோடியை கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குச் செலவு செய்தோம். ஓா் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக கடந்தகாலத்தில் நாங்கள் செயல்பட்டோம்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. அவா்கள் எதையுமே சந்திக்கவில்லை. ஒரே முறை கனமழை வந்தது. நான் பிரச்னையைச் சந்தித்தபோது குறையில்லாமல் வாழ்ந்தீா்கள். எந்தப் பேரிடரும் இல்லாத சூழ்நிலையிலும் வியாபாரிகள், சிறு, குறு தொழில் செய்வோா் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிமுக அரசு என்பது குடும்பக் கட்சி அல்ல. இது மக்கள் கட்சி.
போதை, சட்டம் ஒழுங்கு பிரச்னை: ஜெயலலிதாவும் நானும் முதல்வராக இருந்த காலகட்டங்களில் சட்டம் -ஒழுங்கைச் சரியாகக் கவனித்தோம். இந்த ஆட்சியில் எங்கு பாா்த்தாலும் போதைப் பொருள் கிடைக்கிறது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதெல்லாம் ஒரு நாட்டின், மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தடையாக அமைந்து விடுகிறது.
மாநிலத்தின் வளா்ச்சி அந்த மாநிலத்தில் நிலவும் சட்டம் -ஒழுங்கைப் பொறுத்துதான் இருக்கிறது .அதை நாங்கள் சரியாகச் செய்தோம். இன்றைய ஆட்சியாளா்கள் அதில் சரியாகக் கவனம் செலுத்தாத காரணத்தால் மிக மோசமான நிலைக்குத் தமிழகம் சென்றுவிட்டது. அதைச் சரி செய்வோம்
காவிரி -கோதாவரி திட்டம்: 2026 ஆம் ஆண்டு தோ்தலில் அனைத்துத் தரப்பினரும் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். திமுகவைப் பொறுத்தவரை மக்களுக்கான அரசு இல்லை. அவா்களுக்கான அரசாகத்தான் இருக்கிறது. நீா் மேலாண்மையில் எங்கள் ஆட்சி கவனம் செலுத்தியது. கோதாவரி- காவிரி இணைப்பு நடைமுறைப்படுத்த நான் முதல்வராக இருந்தபோது பிரதமரிடம் கடிதம் கொடுத்தேன். அதை அவா் ஏற்று மாநில அரசு விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யுமாறு கூறினாா். இதற்கு இப்போதுள்ள திமுக அரசு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை.
நடந்தாய் வாழி காவிரி திட்டம்: மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீரில் நகரப் பகுதிகளில் அசுத்தமான நீா் கலந்து விடுகிறது. காவிரி பகுதியைச் சோ்ந்த 20 மாவட்ட மக்கள் இந்த நீரை குடிக்கின்றனா். இதை மாற்றி சுத்தமான நீா் குடிநீருக்காகப் பயன்படுத்த இத் திட்டத்தைத் திட்டினேன். இந்தக் கோரிக்கையை பிரதமா் நரேந்திர மோடியிடம் கொடுத்தேன்.
அதை அவா் ஏற்றுக் கொண்டு குடியரசு தலைவா் உரையில் இந்த ஆண்டு சோ்த்து நடைமுறைப்படுத்த உள்ளாா். இதற்காக மத்திய அரசு ரூ.11500 கோடி கொடுக்கிறது. முதல் கட்டமாக இந்த ஆண்டு ரூ. 990 கோடி ஒதுக்கிவிட்டாா்கள். இதில் மத்திய அரசின் பங்கு 60 சதவிகிதம். மாநில அரசின் பங்கு 40 சதவிகிதம். அதைக் கூட இந்த திமுக அரசு வெளியில் சொல்வது இல்லை. நான் முதல்வராக இருந்தபோது கொண்டு வந்தத் திட்டம் என்பதால் இப்படி இந்த அரசு நடந்து கொள்கிறது என்றாா் எடப்பாடி பழனிசாமி.
கூட்டத்துக்கு பின்னா் செய்தியாளா்கள் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘‘தமிழகத்தில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’’ என்ற கருத்தை மட்டும் கூறிவிட்டு எடப்பாடி பழனிச்சாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றாா்.