Peace Noble Prize : OBAMA Vs TRUMP | மொழி வளர்ச்சி நிதியில் பாகுபாடு ஏன்?| Imper...
`தலைமறைவான ஜெகன் மூர்த்தி?' - தனிப்படை அமைத்த சிபிசிஐடி! - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் காதல் திருமணம் செய்த வாலிபரை ஏடிஜிபி ஜெயராம் காரில் கடத்தி சென்று மிரட்டி தாக்கிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராம் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘இந்த விவகாரத்தில் வாலிபர் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகேஸ்வரி என்பவர் அளித்த வாக்குமூலம், போன் உரையாடல்களில் இருந்து, இந்த சம்பவத்தில் மனுதாரருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு ஆரம்பகட்ட முகாந்திரங்கள் உள்ளன' எனக்கூறி, ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை கடந்த 27-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக ஜெகன்மூர்த்தி தலைமறைவாகியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையில், இந்த வழக்கு சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, 4 தனிப்படைகளை அமைத்து, ஜெகன் மூர்த்தியை தேடி வருகிறது.
இந்நிலையில், ஜெகன் மூர்த்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில், கடந்த 27-ம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதேபோன்று இந்த வழக்கில் இருந்து தனக்கு முன் ஜாமீன் வழங்கிட வேண்டும்" என மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.