திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியைக் கொன்று புதைத்த இளைஞர் கைது!
பெங்களூரு: திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியைக் கொன்று புதைத்த இளைஞர் கைது கர்நாடகத்தில் செய்யப்பட்டார். 6 ஆண்டுகள் தன்னுடன் நெருக்கமாகப் பழகிய இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கொன்று புதைத்த சம்பவம் கர்நாடகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தின் கடக் அருகேயுள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதுஸ்ரீ அங்காடி. அவருக்கு வயது 26. அதே கிரமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் ஹையர்மாத்(28). இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே. அவர்கள் இதனை கண்டித்துள்ளனர். அதன்பின் அந்த பெண்ணை கடக்கில் இருக்கும் தங்கள் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி அந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவானார். இது குறித்து இளம்பெண்ணின் வீட்டார் காவல் துறையிடம் புகாரளித்தனர்.
மாயமான அந்த இளம்பெண் தனது காதலருடன் சேர்ந்து அவருடைய பைக்கில் இளைஞருக்கு தெரிந்த பண்ணை வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவர்கள் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மதுஸ்ரீ சதீஷிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அந்த பெண்ணின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார்.
அதன்பின் யாருக்கும் தெரியாமல் அவரது உடலை எடுத்துக்கொண்டு ஆள் நடமாட்டமில்லாத ஒரு பகுதியில் புதைத்துவிட்டார். மேலும், தனக்கும் இந்த சம்பவத்துக்கும் சம்பந்தமில்லாதது போல வெளியில் நடமாடியுள்ளார். அதன்பின் அவர் ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.
எனினும், காவல் துறை நடத்திய விசாரணையில், காதலர்கள் இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டதாக தெரிய வந்தது.
இந்த நிலையில், வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், மதுஸ்ரீயின் தொடர்பு எண் பல மாதங்களாக அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சதீஷின் எண் தொடர்பிலிருந்தது. மேலும், மதுஸ்ரீயின் கைப்பேசியிலிருந்து கடைசியாக பதிவான இருப்பிடத்துக்கும் சதீஷுக்கும் தொடர்பின்றி இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் சதீஷை கண்டுபிடித்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று தன்னுடன் பைக்கில் பேருந்து நிலையம் வரை வந்த மதுஸ்ரீ அதன்பின் ஒரு பேருந்தில் ஏறி சென்றுவிட்டதாக நாடகமாடி நம்பவைத்துள்ளார்.
இந்த நிலையில், அவர் கூறியவையனைத்தும் பொய் என விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. அதன்பின் அவரை ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 15) கைது செய்த காவல் துறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களுடன் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட பெண்ணின் உடலைப் புதைத்த இடத்திலிருந்து எலும்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பெண்ணின் மண்டை ஓடு இன்னும் கிடைக்கவில்லை அதனைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் இன்று(ஜூன் 16) தெரிவித்தனர்.