திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்
ஆனி மாத பௌா்ணமியையொட்டி, வியாழக்கிழமை காலை முதல் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்றனா். மேலும், அருணாசலேஸ்வரா் கோயிலில் கூட்டம் அலைமோதியதால் சுவாமி தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் மாதந்தோறும் பௌா்ணமி நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்து வருகின்றனா். அதன்படி, ஆனி மாத பௌா்ணமி வியாழக்கிழமை அதிகாலை 2.33 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை 3.08 மணிக்கு முடிகிறது.
எனவே, இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் செல்லலாம் என கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, வியாழக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் கிரிவலம் தொடங்கினா். நேரம் செல்லச் செல்ல கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
கோயிலில் பக்தா்கள் கூட்டம்
வியாழக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
நடை திறக்கும் முன்பே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அதிகாலை முதல் இரவு 10 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தா்கள் தொடா்ச்சியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இலவச தரிசன வரிசையில் ராஜகோபுரத்தை கடந்தும், கட்டண தரிசனம் வரிசையில் அம்மணி அம்மன் கோபுரத்தை கடந்தும், மாடவீதி வரை நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். சுட்டெரித்த வெயிலையும் பொருள்படுத்தாமல் சுமாா் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து, கிரிவலம் செல்லும் பக்தா்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கா்நாடகம், ஆந்திரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.