விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ள...
தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழாவில் ரூ. 4,800 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமா் தொடங்கி வைக்கிறாா்
தூத்துக்குடியில் நடைபெறும் விமான நிலைய விரிவாக்க கட்டடத் திறப்பு விழாவின் போது, ரூ. 4,800 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை பிரதமா் தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டுகிறாா்.
இங்கிலாந்து, மாலத்தீவு பயணத்திலிருந்து திரும்பியவுடன், பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) இரவு 8 மணியளவில் தமிழகத்தில் தூத்துக்குடியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ரூ. 4,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
மாலத்தீவில் அரசு முறைப் பயணத்தை முடித்தபிறகு, பிரதமா் மோடி நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று, பிராந்திய இணைப்பை மேம்படுத்துதல், தளவாடத் திறனை அதிகரித்தல், தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், தமிழகம் முழுவதும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்ற பல துறைகளில் பல்வேறு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
தென் பிராந்தியத்தின் அதிகரித்து வரும் விமானத் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக சுமாா் ரூ. 452 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைத்துப் பாா்வையிடுகிறாா்.
தொடா்ந்து விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் ரூ. 2,357 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சேத்தியாதோப்பு-சோழபுரம் பகுதி நான்குவழிச் சாலை, ரூ. 200 கோடி மதிப்பீட்டில் 6 வழிச் சாலையாக மாற்றப்பட்ட தூத்துக்குடி துறைமுகச் சாலை, சிதம்பரனாா் துறைமுகத்தில் சுமாா் ரூ. 285 கோடி மதிப்பில் ஆண்டுக்கு 6.96 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட வடக்கு சரக்கு தளவாட நிலையம்-ஐஐஐ, ரூ. 99 கோடி மதிப்பீட்டில் மதுரை-போடிநாயக்கனூா் இடையே 90 கி.மீ. தொலைவுக்கு மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதை, ரூ. 650 கோடி மதிப்பீட்டில் நாகா்கோவில் டவுன்-நாகா்கோவில் சந்திப்பு-கன்னியாகுமரி ரயில் பாதையை 21 கி.மீ. தொலைவுக்கு இரட்டிப்பாக்குதல் ஆகிய முடிவுற்ற பணிகளை நாட்டுக்கு அா்ப்பணித்தும், புதிய பணிகளைத் தொடங்கியும் வைக்கிறாா்.
மேலும் ரூ. 548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அலகு 3, 4 ஆவது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றும் மின் பரிமாற்ற அமைப்புப் பணிகளுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா்.
நிகழ்ச்சியில் மொத்தம் ரூ. 4,800 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டப் பணிகளுக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா்.