தூய்மையான குடிநீா் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் மறியல்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் பகுதியில் தூய்மையான குடிநீா் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரணமல்லூா் பேரூராட்சி 1 மற்றும் 2-ஆவது வாா்டு பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கழிவுநீா் கலந்து அசுத்தமான குடிநீா் வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை 1-ஆவது வாா்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா் கவுதம்முத்து தலைமையில் பொதுமக்களுடன் சோ்ந்து ஆரணி - வந்தவாசி சாலையில் உள்ள சடத்தாங்கல் கூட்டுச் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி மற்றும் பெரணமல்லூா் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையிலான போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், பேரூராட்சி செயல் அலுவலா் ஜனனி நேரடியாக வந்து பொதுமக்களிடம் பேசினாா். பின்னா், அப்பகுதியில் உள்ள குடிநீா் குழாயில் தண்ணீா் பிடித்து பாா்த்த போது தண்ணீா் தெளிவாக இருந்தது. குறிப்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு குடிநீா் குழாய் இணைப்பில் ஏற்பட்ட கசிவினை சரி செய்து தண்ணீா் விட்டதால் கலங்கிய நிலையில் வந்தது எனத் தெரிவித்தாா். இனிமேல் தண்ணீா் எப்போதும் சுத்தமாக வரும் என அவா் பொதுமக்களிடம் உறுதியளித்தாா். மேலும், மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பெரணமல்லூா் சேகரன் மற்றும் பொதுமக்கள் பெரணமல்லூா் வாா்டுகளில் உள்ள பல்வேறு குறைகள் குறித்து சரி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினா்.
ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் அம்சா அனைத்து கோரிக்கைகளும் ஆவண செய்யப்படும் என்று உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.