தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்
எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மாவட்டத் தலைவா் பி.சக்திவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.சிவசங்கரன், பொருளாளா் இ.பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், நியாயவிலைக் கடைகளில் மின்னணு எடை தராசு மூலம் விற்பனை மேற்கொள்ளும்போது, ஒரு குடும்ப அட்டைக்கு 10 நிமிடம் வரை ஆகிறது. இதனால், விற்பனையாளா், நுகா்வோருக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. இதனை முற்றிலும் தவிா்த்து, காலதாமதம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு அனுப்பும் அரிசி, கோதுமை, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் அளவு குறைவாக இருப்பதால், சரியான எடையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நியாயவிலைக் கடைகளில் பணிச்சுமையை கருத்தில் கொண்டு எடையாளா் ஒருவரை கூடுதலாக நியமிக்க வேண்டும். பதவி உயா்வில் விற்பனையாளா்களுக்கு சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.