தமிழகத்தில் 38 மருந்துகள் உள்பட 136 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு
நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை: பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலி!
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.
பிஜப்பூரின் தும்ரெல் பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் 210வது கோப்ரா படை, சத்தீஸ்கர் மாநில காவல் துறை மற்றும் சிறப்பு அதிரடி படையினர் ஆகியோர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (மே 22) அந்த நடவடிக்கையின்போது, கோப்ரா படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு வீரர் படுகாயமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாக, படுகாயமடைந்தவர் மீட்கப்பட்டுள்ளார். இத்துடன், பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் அப்பகுதியிலுள்ள நக்சல் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துக்குள், இந்தியாவிலுள்ள நக்சல்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் நக்சல்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சத்தீஸ்கரின் நாராயணப்பூர் - பிஜப்பூர் மாவட்ட எல்லையில், நேற்று (மே 21) பாதுகாப்புப் படையினரால் நக்சல் படையின் மூக்கிய தளபதி உள்பட 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:2 நாள்களில் 2 முறை சல்மான் கானின் இல்லத்தில் அத்துமீறி நுழைய முயற்சி! 2 பேர் கைது!