ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்: கு.செல்வப் பெருந்தகை
நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகுவதாக அறிவித்த நிலையில் ஓபிஎஸ் என்னிடம் கூறியிருந்தால் பிரதமர் மோடியுடான சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
ஆனால், நயினார் நாகேந்திரனை 6 முறை போனில் தொடர்புகொள்ள நான் முயற்சித்ததாகவும் அவர் தனது அழைப்பை எடுக்கவில்லை எனவும் அதனால் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் ஓபிஎஸ் கூறுகிறார்.
ஓபிஎஸ் சொல்வதில் உண்மையில்லை, நான்தான் ஓபிஎஸ்ஸை தொடர்புகொண்டேன் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இருவரும் மாறிமாறி பேசி வரும் நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"இதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தலைவர்கள் பொய் சொல்ல வாய்ப்பு இல்லை. ஓபிஎஸ்ஸுக்கு கருத்து இருந்தால் அதை அவர் வெளிப்படையாகச் சொல்லலாம். அவர், பாஜக தலைவர்களை குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஓபிஎஸ் இன்னும் நிதானமாக தன்னுடைய அரசியல் நகர்வை நகர்த்தியிருக்கலாம்" என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "தமிழக முதல்வர் மக்களுக்கு ஒரு கடிதம் எழுதி, மத்திய அரசை எதிர்த்து, தினமும் போராடி வருவதாகக் கூறுகிறார். மத்திய அரசு தினமும் என்ன செய்து கொண்டிருக்கிறது? மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. மக்கள் போராடுகிறார்கள் என்று ஏன் சொல்கிறீர்கள்? திமுக அரசின் தவறான நிர்வாகத்தால் மக்கள் போராடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு நேரெதிராக இருந்த கட்சியைச் சேர்ந்தவர் முதல்வரைச் சென்று சந்திக்கிறார். உடல்நிலை பற்றிய விசாரிப்பு தவறு இல்லை. ஆனால் எதிர்க்கட்சியாக இருந்தவர்களை சந்தித்து கூட்டணிக்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றால் அது துரோகம்.
அருண் ஜெட்லீ இறந்தபிறகு அவர் மீது ராகுல் காந்தி குற்றம் சாடுகிறார். திமுக 5 முறை ஆட்சியில் இருந்தும் சமூக நீதியை நிலைநாட்ட முடியவில்லை. ஆணவக் கொலைகள் இன்றும் நடப்பது வெட்கக்கேடு" என்று பேசினார்.