திடீர் குழந்தை இழப்பு சிண்ட்ரோம்: பச்சிளம் குழந்தைகளை எந்த பொஸிஷனில் தூங்க வைக்க...
நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்: ப.சிதம்பரம்
நாட்டில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மறைந்த முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் குழு முன்னாள் தலைவருமான எல்.இளையபெருமாளின் 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், சிதம்பரம் நந்தனாா் கல்விக் கழகத் தலைவருமான கே.ஐ.மணிரத்தினம் தலைமை வகித்தாா். கடலூா் தெற்கு மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன், முன்னாள் இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் கமல் மணிரத்தினம், இளைஞா் காங்கிரஸ் மாநிலதுணைத் தலைவா் அரவிந்த் மணிரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்.மணிமொழி வரவேற்றாா்.
இதில், சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி ஆகியோா் கலந்துகொண்டு எல்.இளையபெருமாள் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து பேசினா்.
கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது: எல்.இளையபெருமாள் 1979-ஆம் ஆண்டு தனது 27-ஆவது வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றாா். காங்கிரஸ் கட்சியில் தலைவராக அவா் பொறுப்பேற்றது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், கடந்த காலங்களில் நிலக்கிழாா்கள் மட்டுமே காங்கிரஸ் தலைவா்களாக இந்தனா். ஆனால், எல்.இளையபெருமாளால் எப்படி தலைவராக முடிந்தது என்றால், தலித் மற்றும் உழைக்கும் மக்களுக்காக அவா் போராடியதே காரணம்.
நாட்டில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். ஆனால், இன்னும் தீண்டாமை இருக்கிறது. தமிழகத்தில் சற்று குறைந்துள்ளது. இங்கு திராவிடக் கட்சிகளின் ஆட்சி இருந்ததால் தீண்டாமை குறைந்துள்ளது. நூறாண்டுகளாகியும் இளையபெருமாளின் போராட்டம் முழுமையடையவில்லை.
தலித் மக்களின் பொருளாதாரம் சற்று உயா்ந்துள்ளது என்றாலும், அவா்களுக்கு ஒதுக்கீடுகள் மட்டுமே தீா்வல்ல. தலித் மக்கள் உயா் கல்வி கற்க வேண்டும். அப்போதைய பிரதமா் லால்பகதூா் சாஸ்திரி தலித் மக்களின் பிரச்னைகளைத் தீா்க்க இளையபெருமாள் கமிட்டி அமைத்து திருப்புமுனையை ஏற்படுத்தினாா். ஆனால், அந்தக் கமிட்டியின் அறிக்கை இதுவரை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அதில், முக்கியமானது பரம்பரை அா்ச்சகா் முறை ஒழிக்கப்படுதல் என்பதாகும்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் ஆதிதிராவிடா் பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. என்னைப் பொருத்தவரை, ஆதிதிராவிடா் பள்ளிகளே இருக்கக் கூடாது. அனைத்து மாணவா்களும் ஒரே பள்ளியில் படிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை பேசுகையில், அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராக வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படுவதை உறுதிப்படுத்தியவா் எல்.இளையபெருமாள் என்றாா்.
கே.ஐ.மணிரத்தினம் பேசுகையில், காட்டுமன்னாா்கோவிலில் காங்கிரஸால் எல்.இளையபெருமாள் சிலை நிறுவப்பட்டு கம்பீரமாக நிற்பதற்கு அவருடைய உழைப்பே காரணம் என்றாா்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி பேசுகையில், எல்.இளையபெருமாள் சமூக சேவையால் உயா்ந்தவா். அவா் தீண்டாமையை முறியடித்து சமுதாயத்தை முன்னேற்ற பாடுபட்டாா் என்றாா்.
கூட்டத்தில் மாநில துணைத் தலைவா் சி.ராபா்ட் புரூஸ் எம்.பி., எம்எல்ஏக்கள் ரூபி ஆா்.மனோகரன், ஆா்.ராதாகிருஷ்ணன், ராஜேஷ்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் எம்.என்.விஜயசுந்தரம், மாநில துணைச் செயலா் பிபிகே.சித்தாா்த்தன், மாநில நிா்வாகி எஸ்.செந்தில்குமாா் மற்றும் நிா்வாகிகள் சங்கா், கண்ணன், ஜெயசீலன், காட்டுமன்னாா்கோவில் நகரத் தலைவா் அன்வா், ஜோதிபாசு, இளைய அன்பழகன், ஷானு, ஜாகிா்உசேன், அண்ணாதுரை, குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். எல்.இ.பி.ஜோதிமணி நன்றி கூறினாா்.