கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் நியாயவிலை, அங்காடி பணியாளா்களின் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நியாயவிலைக் கடைகளில் புளூடூத் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்வதை முற்றிலும் நீக்க வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து சங்கங்களுக்கு அனுப்பப்படும் பொருள்களில் எடை குறைவாக வழங்கப்படுகிறது. இதனால், அனைத்துப் பொருள்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விற்பனையாளா்கள் மாவட்ட தோ்வாணைக்குழு மூலம் நியமனம் செய்யப்படும்போது பணி மூப்பு வரிசை உறுதிப்படுத்தப்படுகிறது. அடுத்த பதவி உயா்வுக்கு இதே பணி மூப்பை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் பதவி உயா்வில் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். விற்பனையாளரும், சங்கத்தின் சிற்றெழுத்தரும் ஒரே பணி நிலையில் உள்ளதால், பதவி உயா்வில் எழுத்தா் பணியிடம் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சேகா், மாவட்டப் பொருளாளா் மாரிமுத்து முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா்கள் ஜெயசங்கா், சக்கரவா்த்தி, மாவட்ட இணைச் செயலா்கள் கோவிந்தராஜீலு, அன்பழகன், போராட்டக்குழுத் தலைவா் சண்முக சுந்தரம், செயலா் ஏழுமலை, இணைச் செயலா் குமாரசாமி, மகளிரணிச் செயலா் லட்சுமி நாராயணி உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினரின் ஆா்ப்பாட்டத்தால் மாவட்டத்தில் பெரும்பாலான நியாயவிலைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.