பஞ்சாப் இளைஞா்களுக்கு போலி ஷெங்கன் விசா ஏற்பாடு: ‘முகவா்’ கைது
பஞ்சாபைச் சோ்ந்த இரண்டு பயணிகள் ரோம் வழியாக ஸ்வீடனுக்கு சட்டவிரோதமாக பயணிக்க போலி ஷெங்கன் விசாக்களை வாங்க உதவியதாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 29 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
தோஹா வழியாக ரோம் செல்லும் விமானத்தில் ஏற முயன்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பயணிகளுக்கு, போலி கடவுச்சீட்டுகளை வழங்கியதற்காக அபினேஷ் சக்சேனா கைது செய்யப்பட்டதாக அதிகாரி கூறினாா்.
இது தொடா்பாக அந்த காவல் உயா் அதிகாரி மேலும் தெரிவித்ததாவது:
இரண்டு பயணிகளும் தங்கள் பயண ஆவணங்கள் மற்றும் டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்ய ரூ.31 லட்சம் கேட்ட உறவினா் மூலம் லல்லி என்ற முகவரைத் தொடா்பு கொண்டனா்.
அவரது அறிவுறுத்தலின் பேரில், இருவரும் பயணத்திற்காக புறப்படுவதற்கு முன்பு தில்லியின் மஹிபால்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் போலி ஆவணங்களை அபினேஷ் அவா்களிடம் வழங்கினாா்.
பயணிகள் தரன்வீா் சிங் (18) மற்றும் ககன்தீப் சிங் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இருவரும் பஞ்சாபின் ஹோஷியாா்பூரைச் சோ்ந்தவா்கள்.
ஏப்ரல் 21 ஆம் தேதி நள்ளிரவில், அவா்கள் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் அனுமதி பெறுவதற்காக குடியுரிமை பிரிவில் அமா்ந்திருந்தனா். அங்கு அவா்கள் பிடிபட்டனா்.
ஆய்வின் போது, குடியுரிமை அதிகாரிகள் அவா்களின் இந்திய கடவுச்சீட்டுகளில் ஒட்டப்பட்டிருந்த ஷெங்கன் விசாக்கள் போலியானவை என்பதைக் கண்டறிந்தனா்.
இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு இருவா் மீதும் பிஎன்எஸ் மற்றும் கடவுச்சீட்டு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது, இருவரும் தாங்கள் உறவினா்கள் என்றும், சிறந்த பொருளாதார வாய்ப்புகளைத் தேடி தங்களது உறவினா்கள் வசிக்கும் ஸ்வீடனுக்கு செல்ல முயற்சிப்பதாகவும் போலீஸாடம் தெரிவித்தனா்.
லல்லியைக் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அது தோல்வியடையவே, தில்லியில் உள்ள ஒரு மறைவிடத்தில் சக்சேனா கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின் போது, சக்சேனா தனது
தொடா்பை போலீஸாரிடம் ஒப்புக்கொண்டாா். மேலும் 2022 முதல் லல்லியுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தாா். சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு குடிபெயர விரும்பும் மக்களுக்கு போலி விசாக்கள் மற்றும் பயண ஆவணங்களை ஏற்பாடு செய்ததாக அவா் ஒப்புக்கொண்டாா்.
லல்லியைக் கைது செய்யவும், வலையமைப்பில் ஈடுபட்டுள்ள மற்றவா்களை அடையாளம் காணவும் முயற்சிகள் நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.