பாகிஸ்தான் தனது பாவங்களுக்கு விலை கொடுக்க நேரிடும்: காங்கிரஸ் சாடல்
ஜம்மு நகரம் மற்றும் பிற பகுதிகளில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதல் தோல்வியை அடுத்து தொடர் குண்டுவெடிப்பு மற்றும் சைரன்கள் சப்தங்களைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தனது பாவங்களுக்கு விலை கொடுக்க நேரிடும் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காம் சுற்றுலாத் தளத்தின் பைசாரன் பள்ளத்தாக்கில் ஏப். 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 13 நாள்கள் கழித்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் எல்லை மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை (மே 6) நள்ளிரவு துல்லி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.
இந்த நிலையில், ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா மற்றும் ஆர்னியாவில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் எட்டு ஏவுகணைத் தாக்குதலை வியாழக்கிழமை இரவு நடத்தியது.
இதையடுத்து பாகிஸ்தானின் அனைத்து ஆளில்லாத ட்ரோன் மற்றும் ஏவுகணைகளையும் இந்தியாவின் ‘ஒருங்கிணைந்த ஆளில்லா விமான எதிா்ப்பு’ அமைப்பு ஒவ்வொரு ஏவுகணையையும் இடைமறித்து வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் தாக்குதலை நிரூபிக்கும் வகையிலான தடயங்கள் பல இடங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் தோல்வியை மறைப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் ஜம்மு- காஷ்மீரின் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
உரி, குப்வாரா (கர்னா, தங்தார்), பந்திபோரா (குரேஸ்), ரஜெளரி மற்றும் ஆர்.எஸ். புரா ஆகிய இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் என்ற அச்சங்களுக்கிடையே, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
கேரள காங்கிரஸ் தலைவராக சன்னி ஜோசப் நியமனம்: ராகுல் வாழ்த்து
இந்த நிலையில், பாகிஸ்தான் தனது பாவங்களுக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரவீந்தர் சர்மா கூறியிருப்பதாவது:
ஜம்மு நகரம் மற்றும் பிற பகுதிகளில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை இந்தியாவின் ‘ஒருங்கிணைந்த ஆளில்லா விமான எதிா்ப்பு’ அமைப்பு வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரவீந்தர் சர்மா, "பாகிஸ்தான் தனது பாவங்களுக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும்" என்று கூறினார்.
ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் உள்ளிட்ட இராணுவ தளங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்க பாகிஸ்தானின் புதிய முயற்சிகளை வியாழக்கிழமை இரவு இந்தியா முறியடித்தது, இரு நாடுகளுக்கும் இடையே பரந்த மோதல் ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன.