உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும்: கே.வி. தங்கபாலு
பணக்காரா்களுக்கான அரசாக உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவரும், காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு தலைவருமான கே.வி.தங்கபாலு தெரிவித்தாா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு ஆய்வுக் கூட்டம் பொன்னமராவதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: காங்கிரஸ் தலைவா்கள், தியாகிகள், முன்னோடிகள் மற்றும் நலம்விரும்பிகள் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சிக்காக பல்வேறு சொத்துக்களை வழங்கி இருக்கிறாா்கள். அந்த சொத்துக்களை ஒருங்கிணைப்பது, பாதுகாப்பது, நிலம் தேலைப்பட்டால் அதை மீட்டெடுப்பது உள்ளிட்ட பணிகளை சொத்துப் பாதுகாப்பு குழுவினா் செய்து வருகின்றனா். திமுக தலைமையில் மிகச்சிறந்த வெற்றிக்கூட்டணியை அமைத்துள்ளோம். தவெக கூட்டணி குறித்து தலைமைதான் முடிவெடுக்கும்.
நரேந்திர மோடி அரசு பணக்காரா்களுடைய அரசாக மாறியுள்ளது. ஏழைகள் தாழ்ந்திருக்கின்றனா். எனவே மோடி அரசு வீழ்த்தப்படவேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சி வந்தால் ஏழை மக்களின் வாழ்வு மேம்படும். இந்தியாவில் ஏழ்மை அதிகரித்திருப்பதுக்கு காரணம் காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களையும், அதன் கொள்கைளையும் செயல்படுத்தாமல் மறைத்திருப்பது தான் என்றாா் அவா்.
முன்னதாக, கூட்டத்தில் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப.சிதம்பரம், திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.எஸ்.இராமசுப்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.