பாரத் மாதா கி ஜெய்... பாகிஸ்தானுடன் விளையாட மறுத்ததுக்கு இந்தியா விளக்கம்!
லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் (டபிள்யூசிஎல்) தொடரில் இருந்து இந்தியா சாம்பியன்ஸ் அணியினர் “எங்களது நாட்டை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என விலகியதுக்கு காரணம் கூறியுள்ளார்கள்.
ஓய்வுபெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இந்த டபிள்யூசிஎல் தொடரில் அந்தந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகிறார்கள்.
இந்தப் போட்டியில் அரையிறுதில் இந்தியா சாம்பியன்ஸ் அணியும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியும் மோதுவதாக இருந்தது.
காரணம் என்ன?
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படி இந்திய அணியினர் பாகிஸ்தானுடன் விளையாடுவதை மறுத்துள்ளனர்.
ஏற்கெனவே, இந்தத் தொடரில் லீக் போட்டியில் ஒருமுறை இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சாம்பியன்ஸ் அணி வெளியேறியதால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மற்றுமொரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணியும் ஆஸி. அணியும் மோதுகின்றன.
ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா சாம்பியன்ஸ் அணியினரின் விளக்கம்
இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்தியா சாம்பியன்ஸ் அணியினர் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் அவர்கள் கூறியதாவது:
நாங்கள் பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம். எங்களது நாடுதான் எப்போதும் எங்களுக்கு முதன்மையானது. பிறகுதான் மற்றவை. இந்திய அணியின் உறுப்பினர்கள் என்பதில் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.
நாங்கள் கடினமாக உழைத்து இந்திய கொடியை எங்கள் சட்டைகளில் அணிந்துள்ளோம். எப்போதும், எங்கள் நாட்டை கீழிறக்க மாட்டோம். பாரத் மாதா கி ஜெய்.
ஒருவேளை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடும்படி வந்திருந்தாலும் நாங்கள் மறுத்திருப்போம். இந்தியர்களாகிய நாங்கள் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருப்போம் எனக் கூறியுள்ளார்கள்.
இந்தியா சாம்பியன்ஸ் அணியினர் தங்களது எக்ஸ் பக்கத்திலும் எங்கள் கொள்கைகளில் இருந்து மாறமோட்டோம். நாடுதான் பிரதானம் எனக் கூறியுள்ளார்கள்.