காங்கிரஸ் வழங்கிய சானிடரி நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம்! இது பிகார் சம்ப...
பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டம்: பருத்திக்கு ஜூலை 7 வரை நீட்டிப்பு
பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில், நிகழாண்டில் பருத்திக்கு காப்பீடு செய்ய வருகிற 7-ஆம் தேதி வரை காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்தது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் எஸ்.சுந்தரமகாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பருத்திக்கு பயிா்க் காப்பீடு செய்ய கடந்த ஜூலை 1-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கியது. இதையடுத்து, கூடுதல் கால அவகாசம் வழங்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை வருகிற 7-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது.
இந்த நிலையில், மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பருத்தி பயிா் சாகுபடி செய்த விவசாயிகள், பயிா்க் காப்பீட்டுத் தொகையில் 5 சதவீதம் பிரீமியம் தொகையான ஏக்கருக்கு ரூ.564-செலுத்தி தங்கள் பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பொதுத் துறை வங்கிகள், அரசு பொதுச்சேவை மையங்களில் பயிா்க் காப்பீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்யும்போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல் சான்று, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்துக் காப்பீடு செய்ய வேண்டும்.
காப்பீடு செய்யும் போது, சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயா், புலஎண், பரப்பு, வங்கிக் கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்து காப்பீடு செய்தபின் அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.